அண்ணாமலை புளுகு 8 மணி நேரம் கூட தாக்குப் பிடிக்கல.. “மலிவான அரசியல்”.. கேஎஸ் அழகிரி காட்டம்!
சென்னை : பிரதமர் மோடி வந்து சென்று 4 மாதங்களுக்குப் பிறகு திடீர் ஞானோதயம் ஏற்பட்டு நடவடிக்கை எடுக்க ஆளுநரை சந்தித்து தன் மலிவான அரசியலை அரங்கேற்ற அண்ணாமலை முயற்சிக்கிறார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, செஸ் ஒலிம்பியாட் நிகழ்வுக்கு சென்னை வந்த பிரதமர் மோடிக்கு தமிழக அரசு வழங்கிய பாதுகாப்பில் குளறுபடி இருந்ததாக தமிழக ஆளுநரிடம் புகார் அளித்தார்.
அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்தார். அதுபோன்ற எந்த பாதுகாப்பு குளறுபடியும் ஏற்படவில்லை எனத் தெரிவித்தார். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அண்ணாமைலையின் குற்றச்சாட்டை விமர்சித்துள்ளார்.
அமைச்சர் ஆவதற்கான எல்லா தகுதிகளும் உதயநிதிக்கு உள்ளன..சொல்கிறார் கே.எஸ்.அழகிரி
அண்ணாமலை கிளப்பிய புகார்
தமிழக சட்டம் ஒழுங்கு தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவிற்கு வந்த பிரதமர் மோடிக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை. பிரதமருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாமானிய மக்களின் நிலை என்ன? பிரதமர் வருகையின் போது, மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகளில் குறைபாடு இருந்துள்ளது. இதற்கு யார் காரணமோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
டிஜிபி மறுப்பு
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தனியாக விசாரணை நடத்த வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்திருந்தார். அண்ணாமலையின் இந்தக் குற்றச்சாட்டு பற்றி விளக்கம் அளித்த தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு பாதுகாப்பு குறைப்பாடு குறித்து எந்த ஒரு அரசு துறையும் எங்கள் கவனத்திற்கு கொண்டுவரவில்லை. அண்ணாமலை சொல்வது போல பிரதமர் வருகையின்போது பாதுகாப்பு குறைபாடு தொடர்பான எந்த புகாரும் தமிழக காவல்துறையில் இல்லை எனத் தெரிவித்தார்.
மலிவான அரசியல்
ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு உபகரணங்கள் தணிக்கை செய்யப்படுகிறது. உபயோகமில்லாத உபகரணங்கள் உடனடியாக தவிர்க்கப்படுகிறது. தமிழக காவல்துறை தரமான பாதுகாப்பு உபகரணங்களை கையாளுகிறது என டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலை மலிவான அரசியல் செய்ய முயற்சிக்கிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
அண்ணாமலை பொய்யான தகவல்
இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "செஸ் ஒலிம்பியாட் நிகழ்வில் பங்கேற்க வந்த மோடிக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்காததாக மத்திய பாதுகாப்பு ஏஜென்சி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியதாக ஒரு பொய்யான தகவலை அண்ணாமலை கூறி வருகிறார். டிஜிபி சைலேந்திர பாபு அவர்களும் அது போன்ற எந்த கடிதமும் வரவில்லை என மறுத்திருக்கிறார்.
கெட்டிக்காரன் புளுகு
மோடி வந்து சென்ற 4 மாதங்களுக்குப் பிறகு திடீர் ஞானோதயம் ஏற்பட்டு நடவடிக்கை எடுக்க ஆளுநரை சந்தித்து தன் மலிவான அரசியலை அரங்கேற்ற முயற்சிக்கிறார் அண்ணாமலை. கெட்டிக்காரன் புளுகு 8 நாளைக்கு என்பது போல அண்ணாமலையின் புளுகு 8 மணி நேரம் கூட தாக்குப் பிடிக்கவில்லை." என விமர்சித்துள்ளார் கே.எஸ்.அழகிரி.