சு.சுவாமி திட்டமே இதுதான்.. இது மோடிக்கும் தெரியும்.. ஆனாலும் நடக்குதே - கே.எஸ்.அழகிரி பாய்ச்சல்!
சென்னை : சுப்பிரமணியன் சுவாமி திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்த தவறான வழக்கை தொடர்ந்தார். எந்தத் தவறும் நடைபெறவில்லை என்று தெரிந்தும் பிரதமர் மோடி அமலாக்கத்துறையை ஏவியுள்ளார் என கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
உலக வரலாற்றில் சர்வாதிகாரிகள் தான் இப்படி விசாரிக்கச் செய்வார்கள். அதேபோல தான் பிரதமர் மோடியும் செயல்படுகிறார் என கே.எஸ்.அழகிரி சாடியுள்ளார்.
அமலாக்கத்துறை விசாரணையை கண்டிக்கும் வகையில் நாளை சென்னை சாஸ்திரி பவன் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
நேஷனல் ஹெரால்டு
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் ஏற்கனவே ஜூன் 8ஆம் தேதி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டிருந்தது. சோனியா கொரொனா உறுதி செய்யப்பட்ட நிலையில், விசாரணைக்கு ஆஜராக விலக்கு கோரியிருந்தார். ராகுல் காந்தி வெளிநாட்டில் இருப்பதாகக் கூறி விலக்கு கேட்டார். இந்நிலையில், ராகுல் ஜூன் 13ஆம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. சோனியா காந்தி அமலாக்கத்துறை முன் ஜூன் 23ஆம் தேதி நேரில் ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, "நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளது. அமலாக்கத்துறை என்பது வெளிநாடுகளில் இருந்து நடைபெறும் பண பரிவர்த்தனை தொடர்பாக விசாரிக்க வேண்டிய அமைப்பு ஆகும். தங்களது கருத்துக்கு மாறாக உள்ளவர்களை விசாரணைக்கு அழைப்பது இந்த உலகில் புதியது இல்லை. அன்றைய மொரார்ஜி தேசாய் அரசு இந்திரா காந்தி மீது அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.
மோடிக்கே தெரியும்
நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் ஒரு ரூபாய் கூட பண பரிவர்த்தனை நடக்கவில்லை. அனைத்தும் எழுத்துப் பூர்வமாக செய்யப்பட்டது. ஆனால் சுப்பிரமணியன் சுவாமி திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்த தவறான வழக்கை தொடர்ந்தார். நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் எந்தத் தவறும் நடைபெறவில்லை என்று தெரிந்தும் மோடி காங்கிரசை வீழ்ச்சி அடைய செய்வதற்காக அமலாக்கத்துறையை ஏவி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
சர்வாதிகாரிகள்
உலக வரலாற்றில் சர்வாதிகாரிகள் தான் இப்படி விசாரிக்கச் செய்வார்கள். ஒருவர் மீது தேச துரோக குற்றச்சாட்டை சொல்வார்கள். அதன் பிறகு எதுவும் இல்லை என்று ஆகும். அதேபோல தான் இப்போது பிரதமர் மோடியும் செயல்படுகிறார். அமலாக்கத்துறை பிரதமர் மோடியிடம் சென்றுவிட்டது. விசாரணை என்ற பெயரில் மக்கள் மத்தியில் இழுக்கை ஏற்படுத்துகிறார்கள். மோடியின் சர்வாதிகார ஆட்சியை முறியடித்து ராகுல் காந்தி நட்சத்திரமாக திகழ்வார்.
ஆர்ப்பாட்டம்
எனவே தான் நாளை ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜராகும் நேரத்தில் உண்மையை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக அனைத்து மாநிலங்களிலும் அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெறுகிறது. சென்னையில் அமலாக்கத்துறை அலுவலகம் உள்ள சாஸ்திரி பவன் முன்பு எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த விசாரணையை அமலாக்கத்துறை நடத்தக்கூடாது. நீதிமன்றம் விசாரித்து உண்மையை வெளியே சொல்ல வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.