ஒரே “டீம்”.. பாஜக, காங்கிரஸ் “மிங்கிள்”.. விரைவில் முக்கிய முடிவு! இதுவும் திமுகவுக்கு எதிராகதான்
சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த 6 தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு திமுக வரவேற்பு தெரிவித்த நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் தற்போது முக்கிய முடிவை எடுக்க இருக்கிறது.
இந்திய முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் தலைவருமான ராஜீவ்காந்தி
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991 ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் ராஜீவ் காந்தி மற்றும் பொதுமக்கள், போலீஸ் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ராஜீவ் கொலை- மனிதவெடிகுண்டு தணுவின் கூட்டாளி A1 நளினி, 4 ஈழ தமிழர்- மத்திய அரசு மறு ஆய்வு மனு ஏன்?
7 பேர் கைது
இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையதாக பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் கைதான 7 தமிழர்களுக்கும் தூக்கு தண்டனை வழங்கியது.
சட்டப்பேரவையில் தீர்மானம்
இதனை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2014 ஆம் ஆண்டு 7 தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது. இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பேரறிவாளன் விடுதலை
அந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பாமல் தமிழ்நாடு ஆளுநர் அதை கிடப்பில் போட்டார். இந்த நிலையில் கடந்த மே மாதம் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தனக்கு வழங்கப்பட்டு இருக்கும் சிறப்பு அதிகாரமான 142-வது சட்டப்பிரிவைச் செயல்படுத்தி விடுதலை செய்தது.
6 பேர் விடுதலை
இந்த நிலையில் தங்களையும் அதே சிறப்பு சட்டத்தை பயன்படுத்தி பேரறிவாளனைபோல் விடுவிக்க நளினி உள்ளிட்ட 6 பேரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டது.
இலங்கை தமிழர்கள்
இதனை அடுத்து சிறையில் இருந்து நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுவிக்கப்பட்டனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த நளினியும், ரவிச்சந்திரனும் வெளியே விடப்பட்ட நிலையில், இலங்கை தமிழர்களான முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் திருச்சியில் உள்ள முகாமில் அடைக்கப்பட்டனர்.
காங்கிரஸ் எதிர்ப்பு
ராஜீவ் கொலை வழக்கில் கைதானவர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளும், நாம் தமிழர் போன்ற கட்சிகளும் வரவேற்பு தெரிவித்தனர். ஆனால், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் விடுதலைக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
சீராய்வு மனு
அதேபோல் மத்தியில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களும் 6 பேர் விடுதலைக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் மத்திய அரசு ராஜீவ் கொலை வழக்கில் 6 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளது.
நாராயணசாமி
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான நாராயணசாமி, "உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்த மத்திய அரசுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தேவைப்படும் பட்சத்தில் மறு சீராய்வு மனுவில் காங்கிரஸ் கட்சியும் தங்களை இணைத்துக் கொள்ளும்." என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் முடிவு?
இந்த நிலையில், 6 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக புதிய சீராய்வு மனுவை தாக்கல் செய்திட காங்கிரஸ் தலைமை முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு "முழுக்க முழுக்க ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், முழுவதும் தவறானது" எனவும் காங்கிரஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.