டிட்வா வீக்கானாலும் சம்பவம்! சென்னையில் காலை முதலே கனமழை! பலத்த காற்று!
சென்னை: சென்னையில் காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், இலங்கையில் இருந்து தமிழக கடலோர பகுதிக்கு வந்து அந்த பகுதிகளுக்கு இணையாக பயணித்து ஆந்திரா அருகே தென்மேற்கு பகுதிக்கு வந்தடையும் என சொல்லப்பட்டது.

இந்த நிலையில் டிட்வா புயல் நேற்று இரவு வரை வலுவிழக்காமல் தமிழக கடலோர பகுதிகளுக்கு வந்தது. ஆனால் மேக கூட்டங்கள் இல்லாததால் மழையை கொடுக்க முடியவில்லை. தற்போது இந்த புயல், ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவிழந்தது.
இது இன்று பிற்பகல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னைக்கு தென்கிழக்கே 90 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 130 கி.மீ. தொலைவிலும், கடலூர் , காரைக்காலுக்கு 130 கி.மீ. தொலைவிலும், வேதாரண்யத்திற்கு 240 கி.மீ. தொலைவிலும், நெல்லூருக்கு தென்கிழக்கே 200 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.
ஆழ்ந்த காற்றழுத்தமானது (டிட்வா) தமிழகம்- புதுவை கடலோர பகுதிகளில் 40 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த ஆழ்ந்த காற்றழுத்தம் சென்னை அருகே இரு நாட்கள் அங்கேயே நிலை கொண்டிருப்பதால், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழையை கொடுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காலை முதலே சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படாததால் மழையில் நனைந்தபடியே பள்ளிகளுக்குச் சென்றனர். நீண்ட நேரம் மழை பெய்து வருவதால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் குளிர்ந்த காற்று நிலவி வருகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவிழந்துவிட்டது. இது அடுத்த 2 நாட்களுக்கு, வரும் புதன்கிழமை வரை சென்னை கடலோர பகுதிக்கு அருகே தங்க போவதால் சென்னைக்கு எதிர்பார்த்த மழை இரு நாட்களில் நிச்சயம் கிடைக்கும்.
டிட்வா புயலால் நேற்று எண்ணூரில் 51 மி.மீ. மழையும், இன்று 49 மி.மீ மழையும் பெய்துள்ளது. இரு நாட்களில் மழையானது சீராக இருக்கும். சில நேரங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பிருக்கிறது.
டிட்வா சென்னைக்கு அருகே நடுக்கடலில் தங்குவதால் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில நேரங்களில் தீவிர மழையும் பெய்யும்.
டிட்வா வலுவிழந்து தமிழக உள்மாவட்டங்களின் மீது இருப்பதால் நீலகிரி, கோவை, ஈரோடு, டெல்டா, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications