தாம்பரத்துக்கும் வந்துட்டீங்களா தெய்வமே! யாருப்பா அந்த காண்டிராக்டர்? சாக்கடையில் முளைத்த மின்கம்பம்
சென்னை : வேலூரைப் போல செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட சேலையூர் மணிமேகலை தெருவில் கால்வாய் அமைக்கும் பணிகளில், கால்வாய்க்கு நடுவே மின் கம்பம் இருப்பதைக் கூட அகற்றாமல் அப்படியே கால்வாயை அமைத்து வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் பிரச்னைக்கு தீர்வு காண மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன் துவங்கப்பட்டது.
இந்நிலையில், வடிகால் கட்டும் பணிக்காக வர்த்தக நிறுவனங்களுக்கு முன் குழிகள் தோண்டப்பட்டது. அதில் கான்கிரீட் கம்பிகள் அமைத்து பணிகள் துவங்கப்பட்ட சில நாட்கள் வேகமாக நடைபெற்றன. சில இடங்களில் பணிகள் தொய்வடைந்துள்ளதாக மக்கள் குறைகூறி வருகின்றனர்.

அலட்சியம்?
சில இடங்களில் ஒப்பந்ததாரர்கள் மிகவும் அலட்சியமாக செயல்படுவதாகவும், எந்த நோக்கத்திற்காக மழைநீர் வழிகால்கள் அமைக்கப்படுகின்றன அவை நிறைவேறாமல் போவது போல் பணிகள் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

கால்வாய்க்குள் மின்கம்பம்
தாம்பரம் பகுதியில் தான் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கையும் எழுந்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட சேலையூர் மணிமேகலை தெருவில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கால்வாய்க்கு நடுவே மின் கம்பம் இருந்துள்ளது. அதனை அகற்றாமல் அப்படியே கால்வாயை அமைத்து வருகின்றனர். இதனால் கால்வாயில் நீர் செல்ல முடியாமல் தடுக்கப்படும் நிலை உள்ளது.

மக்கள் கோரிக்கை
ஆகவே மின் கம்பத்தை அகற்றிவிட்டு கால்வாய் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனங்களை பெற்ற நிலையில், இது குறித்து தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவனிடம் கேட்டதற்கு உரிய நடைவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

பல குற்றச்சாட்டுகள்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலூர் மெயின் பஜார் தெரு அருகே காளிகாம்மாள் தெருவில் இருசக்கர வாகனத்தோடு சேர்த்து சாலை போடப்பட்டு இருந்தது. இதேபோல, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பெத்தலேகம் 4 ஆவது தெருவில் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படும் போது தெருவில் இருந்த மின்சார சிமென்ட் கம்பங்களை சேர்த்து கால்வாய் தளம் அமைக்கப்பட்டது. இதேபோன்ற நிகழ்வுகள் சமீபத்தில் மீண்டும் அரங்கேறின. வேலூர் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 2வது தெருவில், அடி பம்ப்பை அகற்றாமலேயே, அதன் மீதே கால்வாய் கட்டப்பட்டது. இப்போது இது தாம்பரம் வந்திருக்கிறது என கிண்டல் செய்கின்றனர் நெட்டிசன்கள்.












Click it and Unblock the Notifications