கொரோனாவிடம் சிக்கிய சென்னை.. போராளிகளாக களம் இறங்கும்.. 3000 வெளி மாவட்ட நர்ஸ்கள்
சென்னையில் கொரோனா சிகிச்சையில் பணியாற்ற கூடுதலாக 3,000 நர்ஸ்கள் வரவழைக்கப்படுகின்றனர்.
சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தமிழகம் முழுவதும் இருந்தும் கூடுதலாக 3000 நர்ஸ்கள் சென்னைக்கு வந்துள்ளனர். நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர், நாகர்கோயில், கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்த நர்ஸ்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தமிழகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை ஒருபக்கம் அதிகரித்து வருவது அச்சம் அளித்தாலும் நோய் பாதிக்கப்பட்டு குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பலருக்கும் நம்பிக்கை அளிக்கிறது.
தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் பலரும் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இதனால் தென் மாவட்டங்களிலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் அதிகரித்து வருகிறது.
சென்னையை அடுத்து திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, மதுரை மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த கூடுதல் மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் நியமனம் செய்ய தமிழக அரசு முடிவு செய்து உள்ளது அதற்கான விளம்பரத்தையும் சமீபத்தில் நாளிதழ்களில் வெளியிட்டது.
தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 2,174 பேருக்கு கொரோனா பாதிப்பு- 48 பேர் பலி
தமிழ்நாடு மருத்துவ தேர்வு வாரியத்தின் மூலமாக ஏற்கனவே 2,000 நர்ஸ்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டங்களில் இருந்து சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்ற கூடுதலாக 3000 நர்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர், நாகர்கோவில், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து 3000 பேர் சென்னைக்கு வருகை தந்துள்ளனர் அவர்கள் அனைவருக்கும் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்காக படுக்கை வசதி அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது 3000 நர்ஸ்கள் பணியாற்ற சென்னைக்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.