"ஸ்டாலின் என்ன டாக்டரா".. "முதல்வரை பார்த்து அழுவதா, சிரிப்பதா".. இருவரும் மக்களுக்காக இணைந்தால்??
கொரோனா ஒழிப்பில் முதல்வரும், முக ஸ்டாலினும் தீவிரமாக இறங்கி உள்ளனர்
சென்னை: "பேட்டி கொடுத்தே, அதில் தவறான செய்திகளைப் பேசி அரசியல் செய்தே, கொரோனாவை ஒழித்துவிடலாம் என்று மாநில அரசு நினைக்கிறது" என்று முக ஸ்டாலின் குற்றஞ்சாட்டுகிறார். அதற்கு "இங்க ஒரு குறை, அங்க ஒரு குறை.. இவங்க என்ன டாக்டர்களா? எப்ப பார்த்தாலும், எதையாவது குறை சொல்றது, அறிக்கை விடறது.. இப்படி தினமும் அறிக்கை விட்டுட்டு இருந்தால் அவங்களுக்கெல்லாம் பதில் சொல்லணும்னு அவசியம் இல்லை" என்கிறார் முதல்வர். இப்படி 2 பேரும் மாறி மாறி உடனுக்குடன் சுடச்சுட பதில்களை தந்து தமிழகத்தை பரபரப்பிலேயே வைத்து வருகின்றனர்!
Recommended Video
கொரோனாவைரஸ் தமிழகத்திற்கு வந்ததில் இருந்தே அதற்கான முன்னெச்சரிக்கை, தடுப்பு, நடவடிக்கை பணிகளை தமிழக அரசு முழு வீச்சில் செய்து கொண்டு வருகிறது.
தொற்று பாதிப்பு எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்று தினந்தோறும் சுகாதார துறை தரப்பில் கொரோனா அப்டேட்கள் தெரிவிக்கப்பட்டாலும், நம் அரசை எந்தவிதத்திலும் துளியும் குறை சொல்ல முடியாது... அந்த அளவுக்கு அரசு எந்திரம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தமிழக அரசு
அதேபோல திமுகவை எடுத்து கொண்டால், சட்டசபைக் கூட்டம் நடந்தபோதே கொரோனாவுக்கான முன்னெச்சரிக்கை வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்து கொண்டே இருந்தது.. கொரோனா தமிழகத்தில் அவ்வளவாக ஊடுருவதற்கு முன்பேயே, தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கை என்ன, பாதிப்பு என்ன, கள நிலவரம், தடுப்பு திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்ப தொடங்கியதே திமுகதான்.. மூத்த தலைவர் துரைமுருகன் உட்பட திருப்பரங்குன்றம் எம்எல்ஏ டாக்டர் சரவணன் வரை மக்கள் நலனுக்காக, பல்வேறு குடைந்து குடைந்து கேள்விகளை கேட்டு கொண்டே இருந்தனர். அதற்கு சளைக்காமல் பதில் தந்து கொண்டிருந்தார் டாக்டர் விஜயபாஸ்கர்!!
தாக்குதல்
ஆனால் சட்டசபை முடிந்தபிறகு, அறிக்கை, ட்விட்டர் வாயிலாக வார்த்தை தாக்குதல்கள் நடந்து வருகின்றன. "செயல்பட தவறினால் திமுக செயல்பட வைக்கும்" என்கிறார் திமுக தலைவர். இதற்கு முதல்வரோ, "டெல்லியில 38 பேர் இருக்காங்களே.. இதுவரைக்கும் ஏதாவது ஸ்டெப் எடுத்திருக்காங்களா? கஜா புயல் வந்தாலும் குறை சொல்வார், தானே புயல் வந்தாலும் குறை சொல்வார், வர்தா புயல் வந்தாலும் குறை சொல்வார்.. ஒகி புயல் வந்தாலும் குறை சொல்லக்கூடியவர் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள் மட்டுமே.. சுனாமி வந்தாலும் குறை சொல்லுவார்.. குறை சொல்றதுக்கு ஒரு கட்சி இருக்குன்னா அது திமுக கட்சிதான்.. வேற எந்த கட்சியும் கிடையாது' என்று நேற்றைய தினம் கூறினார்.
கொரோனா
இதற்கு இன்றைய தினம் முக ஸ்டாலின் பதில் சொல்லும்போது, "பேட்டி கொடுத்தே, அதில் தவறான செய்திகளைப் பேசி அரசியல் செய்தே, கொரோனாவை ஒழித்துவிடலாம் என்று மாநில அரசு நினைக்கிறது. இன்னும் 2, 3 நாளில் கொரோனாவே இருக்காது' என்று முதல்வர் ஆரூடம் சொல்லி இருக்கிறார்.. புள்ளிவிவரத்தைப் பார்க்கும் போது, இவர் மக்களை ஏமாற்றி திசைதிருப்புகிறாரா, அல்லது தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறாரா எனத் தெரியவில்லை... அவரைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை" என்றார்.
பொறுப்பு
இந்த அறிக்கை வந்த கொஞ்ச நேரத்திலேயே முதல்வர் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "பொறுப்புடன் நடந்துக்கணும்.. இது ஒன்றும் அரசியல் விவகாரம் இல்லை.. எல்லா அதிகாரிகளும் இரவு பகல் பார்க்காம, உயிரை குடுத்து வேலை பார்த்துட்டு இருக்காங்க.. எதிர்க்கட்சின்னா முக்கியமான ஆலோசனை தரணும்.. அதைவிட்டுட்டு எப்ப பார்த்தாலும் எதையாவது குறை சொல்றது, அறிக்கை விடறது!! இப்படி அறிக்கை விட்டுட்டு இருந்தால் அவங்களுக்கெல்லாம் பதில் சொல்லணும்னு அவசியம் இல்லை.
மருத்துவர்கள்
எப்ப பார்த்தாலும் அங்க ஒரு குறை இங்க ஒரு குறை.. அனைத்து கட்சி கூட்டத்திற்கு அனுமதி ஏன் மறுக்கப்பட்டதுன்னு கேட்கறீங்க.. அதுல என்ன ஆலோசனை சொல்ல முடியும் சொல்லுங்க பார்க்கலாம்... இவங்க எல்லாம் மருத்துவர்களா? ஆலோசனை சொல்றவங்க மருத்துவர்கள்தான்.. மருத்துவ வல்லுநர்கள் சொல்ற ஆலோசனைபடி அரசு செயல்பட்டால்தான் இந்த நோய் தடுப்பு பணியைநிறுத்த முடியும். அரசியல்வாதிகள் இதுல என்ன பேச முடியும்.. இதெல்லாம் இப்ப பேசணுமா??" என்று திருப்பி போட்டு பதிலளிக்கிறார் முதல்வர்!!
நோயிலும் அரசியலா?
இப்படி முதல்வரும், எதிர்க்கட்சி தலைவரும் ஒருவருக்கொருவர் வார்த்தைகளால் மோதி கொண்டாலும் ஒரே ஒரு விஷயத்தில் இருவருமே உறுதியாக உள்ளனர்.. இரு தரப்புமே மக்களின் மேல் அக்கறையால்தான் சாடி கொள்கிறார்கள்.. நோயில்கூட அரசியலா என்று இருவருமே கேட்டுக் கொள்கிறார்கள்.. மக்கள் உயிருடன் விளையாட வேண்டாம் என்று இருவருமே எச்சரித்து கொள்கிறார்கள்.. இந்த நேரத்தில் எதையும் அரசியலாக்க விரும்பவில்லை என்று இருவருமே அறிக்கை விட்டு கொள்கிறார்கள்.. பொய்க்கணக்குக்கான தவறான புள்ளிவிவரங்களை அள்ளிவீசாதீர்கள் என்று இருவருமே சொல்லி கொள்கிறார்கள்.
இரு துருவங்கள்
ஆக.. இதில் யார் பேசுவது உண்மை, பொய், சரி, தவறு என்றெல்லாம் யோசித்து கொண்டிருப்பதைவிட, இரு தரப்புமே மக்களுக்காகத்தான் தவிக்கிறார்கள்... ஏழை மக்கள் பாதித்து விடக்கூடாது என்றுதான் துடிக்கிறார்கள் என்பதே உண்மை. ஆனால் அதே சமயம், இந்த தவிப்பும், துடிப்பும் இணைந்துவிட்டால்.. இரு துருவங்களும் சேர்ந்துவிட்டால்.. மக்களுக்காக கரம் கோர்த்துவிட்டால் இன்னும் நல்லா இருக்குமே.. அறிக்கை, பதில் அறிக்கை, குறை குற்றம் அதற்குப் பதிலடி என்று போகாமல்.. இருவரும் இணைந்து மக்களை துரத்தி வேட்டையாடும் கொரோனாவிலிருந்து அவர்களைக் காக்க பாடுபட வேண்டும்.
சவடால்கள்
காரணம் மக்கள் மிகவும் பயந்து போயிருக்கிறார்கள். அரசை மட்டும்தான் அவர்கள் நம்பியிருந்தாக வேண்டிய நிலை. எனவே அரசும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். அதேசமயம், எதிர்க்கட்சிகளும் அரசுடன் இணைந்து மக்களுக்காக களம் காண வேண்டும்,. வீண் பேச்சுக்களும் சவால்களும் சவடால்களும் ஒரு தம்பிடிக்கும் பிரயோஜனம் இல்லை என்பதை இரு தரப்புமே உணர்ந்து செயல்பட்டால்தான் மாநிலத்துக்கு அது நல்லது.