அலைமோதும் கூட்டம்.. டாஸ்மாக்களில் ஜோராக தொடங்கிய மதுவிற்பனை.. தமிழகம் முழுக்க போலீஸ் குவிப்பு!
தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் மீண்டும் செயல்படுகிறது.
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது. டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால் தமிழகம் முழுக்க பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க மூன்றாவது முறையாக ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ளது. தற்போது 17ம் தேதி வரை நாடு முழுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு நீட்டிப்பு அமலுக்கு வந்துள்ளது .
ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டு இருந்தாலும் நாடு முழுக்க பச்சை, ஆரஞ்ச் மண்டலங்களில் மதுவிற்பனை கடைகள், பான் மசாலா கடைகள் இயங்க அனுமதி அளித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எங்கு அனுமதி இல்லை
ஆனால் சிவப்பு மற்றும் ஆரஞ்ச் மண்டலத்தில் மது விற்பனைக்கு அனுமதி கிடையாது. விதிமுறை இப்படி இருந்தாலும் இந்தியாவில் சில மாநிலங்களில் சிவப்பு மண்டலத்திலும் மதுக்கடைகள் திறக்கப்படுகிறது. அரசின் வருமானத்தை கருத்தில் கொண்டு சிவப்பு மண்டலத்திலும் மதுபான கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அனைத்து மண்டலங்களிலும் மதுபான கடைகள் திறக்கப்பட்டு உள்ளது.
எங்கெல்லாம் திறக்கும்
சென்னை மற்றும் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் தமிழகத்தில் மதுபான கடைகள் திறக்கப்பட்டு உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் பாதுகாப்பு
தமிழகம் முழுக்க அனைத்து பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். டாஸ்மாக் செல்லும் மக்களை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி டாஸ்மாக் இருக்கும் பகுதிக்கு 500 மீட்டருக்கு முன்பாகவே செக்போஸ்ட் அமைத்து உள்ளனர். அங்கே இருக்கும் இடத்தில் மது வாங்க செல்லும் எல்லோரும் வாகனத்தை நிறுத்த வேண்டும். அங்கிருந்து மக்கள் லைனில் செல்ல வேண்டும். இந்த பகுதியில் இரண்டு போலீசார் நிற்பார்கள்.
கூட்டம் அதிகரிக்கும்
இன்று பெரிய அளவில் டாஸ்மாக் கடைகள் முன் கூட்டம் கூடி வருகிறது. அதன்பின் கடைக்கு அருகில் இரண்டு போலீசார் கூட்டத்தை சரி செய்ய பாதுகாப்பு பணியில் இருப்பார். இன்னொரு பக்கம் வரிசையில் நிற்கும் நபர்களை ஒழுங்குபடுத்த இரண்டு பக்கங்களில் இரண்டு ஊர் காவல் படையினர் நிற்பார்கள். அதேபோல் இரண்டு தன்னார்வலர்கள் இவர்களுக்கு உதவியாக இருப்பார்கள். கூட்டம் அதிகமாக வரும் என்று எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் கூடுதல் போலீசார் நிற்பார்கள்.
சென்னை கட்டுப்பாடு
அதேபோல் சென்னையில் இருந்து செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் எல்லைக்கு மக்கள் சென்று மது வாங்காத வகையில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த பகுதியை கடக்கும் மக்களிடம் மதுபாட்டில்கள் இருக்கிறதா என்று தீவிரமாக இதன் மூலம் சோதனை செய்யப்பட உள்ளது. எல்லை தாண்டி மது வாங்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.
கடும் இடைவெளி
ஒவ்வொருவருக்கும் இடையே 6 அடி இடைவெளியை உறுதி செய்ய வேண்டும். மது கடைகளில் அமர்ந்து குடிக்கும் பார்களுக்கு அனுமதி கிடையாது. மதுவை வாங்கிவிட்டு வீடுகளுக்கு சென்று மது குடிக்கலாம். அதேபோல் கடைகளில் மதுவை வாங்கும் போது ஆறு அடி இடைவெளியை மக்கள் பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் இருந்து மது அருந்த கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுகடைகளில் 5 பேருக்கு மேல் ஒன்றாக கூடக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.