தீயாக பரவும் கொரோனா - அத்தியாவசியமற்ற பணிகளுக்கு படிப்படியாக கட்டுப்பாடு - டாக்டர் ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் 51% பேரும், 45 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் 42% கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியம் தற்போது இல்லை என்றாலும் கொரோனா பாதிப்பு அதிகரித்தால் படிப்படியாக அத்தியாவசியம் இல்லாத பணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக தினசரியும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கூட்டு குடியிருப்பு பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது, என ஆய்வில் தெரிய வந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழகத்தில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் 51% பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
45 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் 42% கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். அதேபோன்று 45 வயதிற்கு மேல் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருபவர்களில் உள்ள இறப்பு சதவிகிதம் 90 ஆகவும், 18-45 வயது வரை கொரோனா பாதிப்பு உள்ளவர்களில் இறப்பு 9 சதவிகிதமாகவும் உள்ளது.
தீவிரமாக பரவும் கொரோனா
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக சென்னை, கோவை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ளதாக கூறினார்.
9 மாவட்டங்களில் தீவிரம்
கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட 46 மாவட்டங்களில் தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களும் உள்ளது. தற்போது வரை தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மட்டுமே ஒரே நாளில் 2 சதவிகிதத்திற்கும் மேலாக பொதுமக்கள் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
லாக்டவுன்
சென்னையில் 100 பேருக்கு சோதனை செய்தால் 4 பேருக்கு பாசிட்டிவ் வருகிறது. மேலும் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியம் தற்போது இல்லை. கொரோனா பாதிப்பு அதிகரித்தால் படிப்படியாக அத்தியாவசியம் இல்லாத பணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் கூறினார்.
பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு
தமிழகம் முழுவதும் கொரோனா நோய் கட்டுப்பாடு பகுதிகளை கண்காணிப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் இப்படி இருந்தால் பாதிப்பு அதிகமாக தான் வாய்ப்பு உள்ளது. நோய் கட்டுப்பாட்டு பணிகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.