வேலை நேரம் அதிகரிப்பு- தொழிலாளர் சட்டங்களுக்கு முடிவு- மே 22-ல் நாடு தழுவிய போராட்டம்- சிபிஎம் ஆதரவு
சென்னை: வேலை நேரம் அதிகரிப்பு, தொழிலாளர் நல சட்டங்களை நீர்த்து போக செய்தல் போன்ற நடவடிக்கைகளைக் கண்டித்து மே 22-ந் தேதி நடைபெறும் நாடு தழுவிய போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில குழு ஆதரவு தெரிவித்துள்ளது.
Recommended Video
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியாவில் மிகப் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய அணிதிரட்டப்படாத தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்கள் என்று அனைவருடைய நலனும் இந்தக் காலத்தில் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை; ஒருபுறம் கொரோனா தொற்றை எதிர்த்து அனைவரும் போராடிக் கொண்டிருக்கும் போது அவர்களின் உரிமைகளின் மீது மத்திய- மாநில அரசுகள் கடுமையான தாக்குதலை நடத்தியிருக்கின்றன. இதை எதிர்த்து மத்திய தொழிற்சங்கங்களின் மேடை மே 22 ஆம் தேதி அன்று இயக்கம் நடத்துகிறார்கள்.
பாஜக கொடியை கூட எங்க பஸ்களில் பறக்கவிடுங்க..தொழிலாளர்களை ஊருக்கு போக விடுங்க... பிரியங்கா காந்தி
12 மணிநேரம் வேலை
மத்திய அரசு அணிதிரட்டப்படாத தொழிலாளர்கள், அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்கள் என்று அனைவருடைய வேலை நேரத்தையும் 8 மணி நேரம் என்பதிலிருந்து 12 மணி நேரம் ஆக உயர்த்த திட்டமிட்டிருக்கிறது. பாஜக தனது மாநில அரசுகளை பயன்படுத்தி தொழிற்சாலை சட்டங்களையும் தொழிலாளர் நலச்சட்டங்களை நீர்த்துப் போகச் செய்கிறது.
200 ஆண்டுகள் போராட்டம்
வேலைநேர அதிகரிப்பு, கூடுதல் வேலைநேரத்திற்கு ஓவர்டைம் கிடையாது, வார விடுமுறை கிடையாது, எந்த தொழிலாளர் நலச் சட்டங்களும் அமல்படுத்தப்படாது என்று சட்டத்தைத் திருத்துகிறார்கள். மொத்தத்தில் இரண்டு நூற்றாண்டுகளாக போராடிப் பெற்ற உரிமைகளை காலில் போட்டு நசுக்குகிறது. பாதிக்கப்பட்ட பெரும் பணம் படைத்தவர்களுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் நிவாரணம் வழங்கும் அரசு, அதைவிடக் கடுமையாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் உரிமைகளையும் சலுகைகளையும் பறித்துக் கொண்டிருக்கிறது.
குறுக்கும் நெடுக்குமாக...
பாதிக்கப்பட்ட தொழிலாளிகளுக்கு நிவாரணமாக நேரடியாக பணம் வழங்க வேண்டும். கொரோனா காலத்திற்கு சம்பளம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்கவில்லை. ஊரே அடங்கிப் போய் இருக்கும் நிலையிலும் இடம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மண்ணுக்கு போய்விட மாட்டோமா என இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டே இருக்கிறார்கள்.
மே 22 போராட்டத்துக்கு ஆதரவு
அவர்களுக்கு சொந்த ஊருக்குச் செல்வதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய அரசு தயாராக இல்லை. இதற்கு எதிராக களம் காணுவது என்று முடிவெடுத்திருக்கும் மத்திய தொழிற்சங்கங்களின் மேடையின் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது, பாராட்டுகிறது. அவர்களது போராட்டத்திற்கு தன்னுடைய ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. அவர்களுடைய கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.