"மிஸ்டர் ரவி".. கவனிச்சீங்களா.. ஆளுநருக்கு அடுத்த சிக்கல்.. கொந்தளிக்கும் காம்ரேடுகள்.. என்னாச்சு?
ஆளுநர் ரவிக்கு கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது
சென்னை: ஆளுநர் ரவியின் கடமைகள், அதிகார வரம்பு, அரசியல் சாசன கோட்பாடுகள், மாநில உரிமைகள் என முக்கிய அம்சங்களில் தமிழக அரசோடு முரண்படுகிறார் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்று சிபிஎம் கட்சி எச்சரித்துள்ளது.
ஆளுநர் ரவியின் செயல்பாடுகளை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகிறார்கள்.. நீட் தேர்வு மசோதாவை கிடப்பில் போட்டது முதல், தமிழக நலனுக்கு எதிராகவே ஆளுநர் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன..
குறிப்பாக, திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இதை வெளிப்படையாகவே தெரிவித்து, ஆளுநரின் போக்கை கண்டித்தும் வருகின்றன.

ஆளுநர் ரவி
அந்த வகையில், காங்கிரஸின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒருமுறை பேசும்போது, "தமிழர்களைப் பற்றி தெரிந்துகொள்ள, டெல்லியில் இருக்கும் பழைய தலைவர்களை கேட்டு பாருங்க.. தேவைப்பட்டால் தமிழர்கள் அநாகரீகமாகவும் நடந்து கொள்வார்கள்... தமிழக மக்கள் நினைத்தால் ஒரு நிமிடத்தில் ரவி தூக்கி எறியப்படுவார்... தபால்காரன் வேலையை செய்பவர்தான் ஆளுநர் ரவி.. இந்த ரவிக்கு வீடு போய் சேர வேண்டிய நேரம் வந்துவிட்டது..

இளங்கோவன்
ரவியை ஒழிக்க நினைத்தால் அதை கொஞ்சம் சீக்கிரமாக செய்ய முடியும்.. ஆனால் ஸ்டாலின் ஆட்சிக்கு கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்பதால் பொறுமையாக இருக்கிறோம்... ரவி அவர்களே, குழந்தை குடும்பத்தோடு இருக்கீங்க.. ஒருவாரத்திற்குள் நீட் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பவில்லை என்றால் காங்கிரஸ் போராட்டம் தீவிரமாகும்... ரவி உங்களை ரயிலில் டெல்லிக்கு அனுப்பி வைத்து விடுவோம்" என்று பேசியிருந்தார்.

ஆர்எஸ்எஸ்
தமிழக ஆளுநருக்காக ஒதுக்கப்பட்ட ராஜ்பவனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று விசிக அன்றே குரல் எழுப்ப தொடங்கிவிட்டது.. அவர் ஆளுநர் ஆர்என்ரவி கிடையாது.. ஆர்எஸ்எஸ்ரவியாக செயல்படுகிறார்.. சனாதனம் பற்றி பேசிய அவர் ஆளுநர் பொறுப்பில் இருந்து விலகி, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தொண்டாற்ற போக வேண்டும்" என்று திருமாவளவன் ஒருமுறை காட்டமாக கூறியிருந்தார்..

பாலகிருஷ்ணன்
அதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆளுநரின் செயல்பாட்டை விமர்சித்து கண்டனங்களை எழுப்பி வரும்.. அந்த வகையில், சிபிஎம் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் ஒரு அறிக்கையை இப்போதும் வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில் உள்ளதாவது: "அண்மையில் ஆளுநர், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களைக் கொண்ட ஒரு கூட்டத்தைக் கூட்டி, தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம் குறித்த பரிசீலனையை நடத்தியிருக்கிறார்.

தேசிய கல்வி கொள்கை
அதில் தேசிய கல்விக் கொள்கையை அதன் சாரம் குறையாமல் அமல்படுத்துவதுதான், பள்ளி மட்டத்திலேயே குழந்தைகளை வடிவமைக்க உதவும், இதன் மூலம் இந்திய தேசத்தை உலகின் அறிவு தலைநகரமாக மாற்றமுடியும் என பேசியிருக்கிறார். பெரு வணிகமயமாகும் கல்வியால், சமூக நீதி தொலைக்கப்பட்ட, மொழி திணிப்பு அம்சங்கள் கொண்ட, மதவெறி சாராம்சத்தை உள்ளடக்கிய பாடத்திட்டத்தால் உருவாகும் அறிவு அர்த்தமுள்ளதாக இருக்க முடியாது, அபாயகரமானதாகத்தான் இருக்கும்...

ஆளுநர் ரவி
கேந்திரிய வித்யாலயா மற்றும் அதன் பாடத்திட்டம் உள்பட ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள்தான் வரும் என்றாலும், ஆளுநர் இது சம்பந்தமான கூட்டத்தில் பேசியிருப்பதைத் தனிமைப்படுத்தி பார்க்க முடியாது. ஆளுநரின் கடமைகள், அதிகார வரம்பு, அரசியல் சாசன கோட்பாடுகள், மாநில உரிமைகள் என முக்கிய அம்சங்களில் தமிழக அரசோடு முரண்படுகிறார் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

கம்யூனிஸ்ட் கட்சி
தமிழக அரசும், பல்வேறு அரசியல் இயக்கங்களும் தொடர்ந்து சுட்டிக்காட்டிய பிறகும் ஆளுநர் தன்னுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லை என்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாகத்துக்கு இணையானதொரு நிர்வாகத்தை ஆளுநர் நடத்த விரும்புகிறாரோ என்ற ஐயப்பாட்டை எழுப்புகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமெனவும், ஜனநாயக எண்ணம் கொண்டோர் குரல் எழுப்ப வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது" என்று கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications