Exclusive: 'பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக அமமுக திகழும்'.. சி.ஆர்.சரஸ்வதி
சென்னை: அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக அமமுக திகழும் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சி. ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல், சட்டசபை இடைத் தேர்தல் குறித்து ஒன்இந்தியா தமிழ் இணையதளத்துக்குஅளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார் சி.ஆர். சரஸ்வதி. அவரது பேட்டியிலிருந்து...

கேள்வி: உங்களுடைய தேர்தல் பணி எப்படி உள்ளது?
பதில்: தேர்தல் பணிகளை சிறப்பாக செய்கிறோம். அமமுக தொண்டர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். எந்த எதிர்பார்ப்புமின்றி அவர்கள் கட்சிப் பணியாற்றுகிறார்கள். ஆளும்கட்சி பணத்தாசை காட்டியும், அவர்கள் அதற்கு ஏமாறாமல் தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள்.
கேள்வி: பிரச்சாரத்திற்கு செல்கிறீர்களே, மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது?
பதில்: தமிழக அரசு பாஜகவின் அடிமையாக மாறிவிட்டதை எண்ணி மக்கள் கொதிப்படைந்துள்ளனர். அதை பிரச்சாரத்திற்கு செல்லும் போது உணர முடிகிறது. இந்த தேர்தல் வித்தியாசமான முடிவை கொடுக்கும். ஏனென்றால் மோடியை ஏற்றுக்கொள்ள தமிழக மக்கள் தயாராக இல்லை. நீட், கஜா புயல் நிவாரணம், அரசு மருத்துவமனைகளில் கவனமின்மையால் ஏற்படும் உயிரிழப்பு, என அனைத்து விவகாரங்களிலும் தமிழக அரசு அலட்சியமாக இருப்பதை மக்கள் மறக்கவில்லை. அதனால் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
கேள்வி: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை, டிடிவி தினகரனால் ஒன்றும் செய்ய முடியாததால் அமமுக தொண்டர்கள் மனதளவில் சோர்வடைந்தது போல் தெரிகிறதே?
பதில்: நிச்சயமாக இல்லை, அதிமுகவினர் திட்டமிட்டு பரப்பும் பொய் இது. அதிக உற்சாகத்துடன் அமமுக தொண்டர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசை துணைக்கு வைத்துக்கொண்டு ஆட்சியை நடத்துகிறார் எடப்பாடி. தோல்வி பயம் காரணமாகவே உள்ளாட்சி தேர்தலை கூட
இவ்வளவு காலம் நடத்தாமல் காலம் தாழ்த்துகிறார்.
பதில்: மத்தியில் அமமுகவின் ஆதரவு யாருக்கு இருக்கும்?
பதில்: இது தலைமை முடிவெடுத்து அறிவிக்க வேண்டிய விவகாரம். செய்தித்தொடர்பாளராகிய நான் ஆதரவு பற்றி யூகிக்க முடியாது. ஆனால் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பது எங்கள் பொதுச்செயலாளரின் நிலைப்பாடு. பிரதமரை தீர்மானிக்கக்கூடிய சக்தியை அமமுகவுக்கு மக்கள் அளிப்பார்கள்.
கேள்வி: அமமுக பணத்தை கொண்டு தேர்தலை எதிர்கொள்கிறதா? உங்கள் கட்சியினர் இடங்களில் தான் ரெய்டு அதிகம் நடக்கிறது...
பதில்: பணத்தை கொடுத்து வாக்குகேட்க வேண்டும் என்ற நிலை அமமுகவுக்கு இல்லை. அமைச்சர்கள் போலீஸ் துணையோடு சென்று பணப்பட்டுவாடா செய்கிறார்கள். எங்களை களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், தேர்தல் பணிகளை முடக்க வேண்டும் என்பதற்காகவும் ரெய்டு நடத்தப்படுகிறது.
கேள்வி: அமமுக- திமுக ரகசிய கூட்டணி வைத்துள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறதே, அதற்கு உங்கள் பதில்?
பதில்: தலைவர் எம்.ஜி.ஆரும், அம்மாவும், எதிர்த்த திமுகவோடு நாங்கள் எப்படி ரகசிய கூட்டணி வைப்போம். அதுவும் ஆர்.கே.நகரில் டெபாசிட் இழந்த கட்சியோடு நாங்கள் ஏன் கூட்டணி வைக்க வேண்டும். எங்களுக்கு என்றும் களத்தில் எதிரி திமுக தான்.












Click it and Unblock the Notifications