திமுக அரசை நம்பி பயனில்லை.. நாங்க இருக்கோம்.. அவசர தேவைக்கு உடனே கால் பண்ணுங்க.. அறிவித்த எடப்பாடி
சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் என்று திமுக ஆட்சியாளர்கள் எடுத்த போட்டோஷூட்கள் வெற்று விளம்பரங்கள் தான் என்பதை இன்றைய சென்னையின் சாலைகள் அம்பலப்படுத்தியுள்ளன. இனி இவர்களை நம்பி எந்தப் பயனும் இல்லை. சென்னைவாழ் பொதுமக்கள் இந்த தருணத்தில் தங்களுக்கு தேவையான உதவிகளை அதிமுக ஐடி விங் சார்பில் அமைக்கப்பட்டுள்ள Rapid Response Team-ஐ தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் நேற்று உருவான ஃபெஞ்சல் (பெங்கல் - Fengal) புயல் இன்று மாலைக்கு மேல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் எனவும், இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாடு மையத்திற்கு வருகை தந்து, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். மேலும், மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கால் வாயிலாக பேசி, பணிகளை முடுக்கிவிட்டார்.
இந்நிலையில், பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, அதிமுக சார்பில் ரேபிட் ரெஸ்பான்ஸ் டீமை அமைத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. சென்னை முழுக்க, உதவி தேவைப்படுபவர்கள் இந்த குழுவினரை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. மக்கள் அனைவரும் வானிலை ஆய்வு மையம் அளிக்கும் தகவல்கள் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மழைநீர் வடிகால் பணிகள் என்று திமுக ஆட்சியாளர்கள் எடுத்த போட்டோஷூட்கள் வெற்று விளம்பரங்கள் தான் என்பதை இன்றைய சென்னையின் சாலைகள் அம்பலப்படுத்தியுள்ளன. இனி இவர்களை நம்பி எந்தப் பயனும் இல்லை!
எனவே, எனது அறிவுறுத்தலின்படி, அதிமுக ஐடி விங் சார்பில் Rapid Response Team, அதாவது அவசரகால தொடர்பு ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னைவாழ் பொதுமக்கள் இந்த கடுமையான தருணத்தில் தங்களுக்கு தேவையான உதவிகளை கழகத் தன்னார்வலர்களை எந்நேரமும் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்." எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மற்றொரு பதிவில், "ஃபெஞ்சல் புயல் இன்று கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் , வடதமிழ்நாடு மற்றும் கடலோர மாவட்டங்களில் வேகமான காற்றுடன் மழை பெய்து வருகிறது.
எனவே பொதுமக்கள் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள எச்சரிக்கைகளை கவனமாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன், மிக அத்தியாவசிய தேவைகள் ஏற்பட்டால் ஒழிய மற்ற நேரத்தில் வெளியே வர வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்.

மேலும் பொதுமக்கள் சாலைகளில் நடக்கும்போது கழிவு நீர் குழாய் திறப்புகள் மூடியுள்ளனவா என்றும், மின்கம்பிகள் எதுவும் அறுந்து விழுந்துள்ளதா என்பதையும் கவனத்தில் கொண்டு
நடந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதேசமயம் அரசு உடனடியாக ஆங்காங்கே தேங்கி நிற்கும் வெள்ள நீரை அகற்ற வேண்டும் என்றும், அம்மா உணவகங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, அவர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆங்காங்கே மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை நேரடியாக அவர்களிடத்தில் சென்று செய்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications