வங்கக்கடலில் காற்றழுத்தம்...24ல் புயலாக மாறி 26ல் கரையைக் கடக்கும் - தமிழகத்தில் வெப்பநிலை உயரும்
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. இந்த காற்றழுத்தம் 24ஆம் தேதி புயலாக உருவாகும் எனவும் 26ஆம் தேதி ஒடிசா பங்களாதேஷ் இடையே கரையைக் கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள
சென்னை: மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. இந்த காற்றழுத்தம் நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் 24ஆம் தேதி புயலாக உருவாகும் எனவும் வானிலை மையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலானது வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து 26ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் புயல் காரணமாக 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை தமிழகத்தில் தரைக்காற்று மேற்கு வடமேற்கு திசையை நோக்கி வீசக்கூடும் என்பதால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடி மின்னலுடன் மழை
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

மழை பெய்ய வாய்ப்பு
நாளை முதல் 25ஆம் தேதி வரைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், கடலோர தமிழகம், புதுவை காரைக்காலில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும்.

சூறைக்காற்று வீசும்
சென்னையைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். மத்திய வங்கக் கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இன்று முதல் 26ஆம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையைக் கடக்கும்
26ஆம் தேதி மன்னார் வளைகுடா, தெற்கு வங்கக் கடல் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். வடக்கு வங்கக் கடல், மேற்கு வங்க கடலோர பகுதிகளில் மணிக்கு மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இடை இடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வானிலை மையம் அறிவிப்பு
தென்மேற்குப் பருவமழை தெற்கு வங்கக் கடல், மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சிறிது தொலைவு முன்னேறியும் அந்தமான் தீவுகளில் முழுமையாகவும் முன்னேறியுள்ளது என வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications