காணாமல் போன 16 மீனவர்கள்- மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை: டவ்-தே புயலில் சிக்கி காணாமல் போன தமிழக்கத்தின் 12 மீனவர்கள் உள்ளிட்ட 16 பேரை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரபிக் கடலில் உருவான டவ்-தே புயல் குஜராத்தில் கரையை கடந்தது. குஜராத்தில் கோரத்தாண்டவமாடிய இந்த புயலுக்கு 60க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் பெரும் அழிவை டவ்-தே புயல் ஏற்படுத்தியது. இப்புயலின் போது கேரளாவில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழகத்தின் 12 மீனவர்கள் உட்பட 16 மீனவர்கள் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.
இந்நிலையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், 16 மீனவர்கள் (தமிழகத்தின் 12 மீனவர்கள், மேற்கு வங்கத்தின் 4 மீனவர்கள்) காணாமல் போனது குறித்து ஏற்கனவே கொச்சி கடற்கரை காவல்படையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் தரப்பில் இருந்து எந்த தகவலும் வரவில்லை. காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர். ஆகையால் மீனவர்களைக் கண்டுபிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.