முன்னாள் முதல்வர் ஈபிஎஸ், இந்நாள் முதல்வர் ஸ்டாலின்.. பிரதமர் சந்திப்பு.. தயாநிதி மாறன் ட்வீட் வைரல்
சென்னை: பிரதமர் மோடியுடன் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்நாள் முதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் சந்திப்பை ஒப்பிட்டு தயாநிதி மாறன் எம்பி பதிவிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற ஆட்சியை அமைத்தது. அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றார்.
திமுகவை எதிர்த்து பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்த அதிமுக கூட்டணி 75 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
உறவுக்குக் கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் - மோடி உடனான சந்திப்பு பற்றி ஸ்டாலின் விளக்கம்
டெல்லியில் முதல்வர் ஸ்டாலின்
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு ஸ்டாலின், இன்று முதல்முறையாக டெல்லி சென்றார். தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய அவர், காலை திமுக எம்பிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, இன்று மாலை ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்தார். இருவரும் தனிப்பட்ட முறையில் சுமார் 25 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர்.
— Dayanidhi Maran தயாநிதி மாறன் (@Dayanidhi_Maran) June 17, 2021 |
வைரலாகும் தயாநிதி மாறன் ட்வீட்
இந்நிலையில், பிரதமருடனான சந்திப்பு குறித்து மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது. தயாநிதி மாறன் தனது ட்விட்டரில், பிரதமர் மோடியுடன் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்நாள் முதல்வர் ஸ்டாலின் ஆகியோரது சந்திப்பை ஒப்பிடும் வகையிலிருந்த படத்தைப் பதிவிட்டுள்ளார். தயாநிதி மாறனின் இந்த ட்வீட்டை தற்போது பலரும் ரீட்வீட் செய்து வருகின்றனர்.
மனநிறைவை அளிக்கும் சந்திப்பு
முன்னதாக, பிரதமருடனான சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியுடனான சந்திப்பு மனநிறைவை அளிக்கக் கூடிய ஒரு சந்திப்பாக இருந்ததாகவும் உண்மைக்கு கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்பும் என்ற அடிப்படையில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடைபெற்றதாகவும் தெரிவித்தார். மேலும், வளர்ச்சி திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாகப் பிரதமர் உறுதி அளித்ததாகத் தெரிவித்தார்.
கோரிக்கைகள்
மேலும், தமிழ்நாடு அரசு சார்பில் 20க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், அது குறித்தும் விளக்கினார். திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும், கூடுதல் தடுப்பூசிகளைத் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும், சிஏஏ சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.