அதிரடியாக அறிவிக்கப்பட்ட ரூ.1000 பொங்கல் பரிசு! யாருக்கெல்லாம் கிடைக்காது? லிஸ்ட் இதோ!
சென்னை: பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், யார் யாருக்கெல்லாம் இது கிடைக்காது என்பது குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் ரூ. 238.92 கோடி செலவில், தமிழகத்தில் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்லாது இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானாது.

இந்த தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால், ரொக்கப்பணம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், ரொக்கம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதற்கு சில காரணங்களும் முன்வைக்கப்பட்டன.
அதாவது, கடந்த டிசம்பரில் வடதமிழகத்தை ஒட்டி கடந்து சென்ற மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிரம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. உயிரிழப்புகள் பெரிய அளவில் இல்லை என்றாலும் பொருள் இழப்புகள் கடும் தாக்கத்தை ஏற்படுத்தின. குறிப்பாக வடசென்னையின் எண்ணூர் பகுதியில், வெள்ளத்தோடு சேர்ந்து கச்சா எண்ணெய் கழிவும் வெளியேறியதால் மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டனர். இந்த பாதிப்பிலிருந்து அவர்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை.
எனவே பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6000 நிவாரணமாக வழங்கப்பட்டது. எண்ணூர் மக்களுக்கு கூடுதல் நிவாரண தொகை வழங்கப்பட்டது. அதேபோல இந்த புயல் பாதிப்பு சலசலப்பு ஓய்வதற்குள் தென் தமிழகத்தை கடுமையான மழை வெள்ளம் தாக்கியது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்ததால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டன.
எனவே இந்த மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கும் ரூ.6000 நிவாரணமாக வழங்கப்பட்டது. இப்படியாக ஏராளமான நிதி வழங்கப்பட்டதால், நிதி நிலைமை சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. எனவேதான் இந்த முறை பொங்கலுக்கு ரொக்கம் வழங்கப்படவில்லை என்று பேச்சு அடிப்பட்டது. மட்டுமல்லாது தமிழக அரசின் கடன் சுமையும்அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில்தான் சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, குடும்ப அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, வெல்லம், முழு கரும்புடன் ரூ.1000 பரிசு தொகையும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்திருக்கிறது. ஆனால் இந்த தொகை அனைவருக்கும் கிடைக்காது என்பது கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பெற முடியும். மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைத்தாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் ஆகியோருக்கு தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகை ரூ.1000 வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications