கமல் சார்.. அரவணைக்கிறது இருக்கட்டும்.. சீட் கிடைக்குமா?...கலக்கத்தில் தேமுதிக!
சென்னை : இதுவரை அதிமுக கூட்டணியில் இருந்து வந்த தேமுதிக, இந்த முறை கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. இதனால் தேமுதிக.,வை தங்கள் பக்கம் இழுக்க திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் கூட்டணி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இரண்டு அணிகளில் இருந்தும் தேமுதிக.,வுடன் பேச உயர்மட்டக் குழு தயாராகி வருகிறது. ஆனால் இரண்டில் எதை தேர்வு செய்தாலும் தங்களுக்கு போட்டியிட சீட் கிடைக்குமா என்ற கேள்வியும், குழப்பமும் தேமுதிக.,வில் ஏற்பட்டுள்ளது.
முடிவு எட்டாத பேச்சுவார்த்தை
தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் அதிமுக - தேதிமுக இடையே தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால் தேமுதிக கேட்ட அளவில் தொகுதிகளை ஒதுக்க அதிமுக தலைமை மறுத்து வந்தது. இருந்தும் பல கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் கடைசி நிமிடத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக தலைமை அறிவித்துள்ளது.
தேமுதிக கேட்டது என்ன
அதிமுக கூட்டணியில் 13 சீட்களை மட்டுமே தேமுதிக.,விற்கு ஒதுக்க அதிமுக முடிவு செய்தது. ஆனால் 41 தொகுதிகள் வேண்டும் என தேமுதிக கேட்டு வந்தது. விஜயகாந்த்தின் லக்கி நம்பர் 5 என்பதால் கூட்டுத்தொகை 5 வரும் தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்பதில் தேமுதிக உறுதியாக இருந்தது.
கடைசி வரை அமைதி காத்த அதிமுக
தேமுதிக கேட்ட தொகுதிகளை தர அதிமுக தலைமையும் தொடர்ந்து மறுத்து வந்தது. கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போதே தேமுதிக.,வில் உள்ள சுதிஷ் உள்ளிட்ட சில நிர்வாகிகள் அதிமுக தலைமையை தொடர்ந்து விமர்சித்து வந்தனர். ஆனால் அதனை கண்டு கொள்ளாமல், அமைதியாக கூட்டணியை உறுதி செய்வதிலேயே அதிமுக கவனம் செலுத்தியது.
எங்க கூட்டணிக்கு வாங்க
அதிமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை விஜயகாந்த் அறிவித்ததும், தங்கள் கூட்டணிக்கு வருமாறு திமுக.,வும், மக்கள் நீதி மய்யமும் அழைப்பு விடுத்து காத்திருக்கின்றன. இதில் கமல் ஒரு படி மேலே போய், எங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைப்போம் என கூறி உள்ளார்.
அரவணைப்பீங்க...சீட் கொடுப்பீங்களா
கமலின் அழைப்பை ஏற்று, மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் தேமுதிக., இணைந்தால் எப்படி சீட் ஒதுக்க போகிறார். ஏற்கனவே 234 தொகுதியில் 154 ல் மக்கள் நீதி மய்யமும், கூட்டணி கட்சிகளான சமத்துவ மக்கள் கட்சியும், ஐஜேகே கட்சியும் தலா 40 இடங்களில் போட்டியிட உள்ளதாக கமல் அறிவித்து விட்டார். 234 தொகுதிகளையும் தங்களுக்குள் பிரித்துக் கொண்டதால் தேமுதிக.,விற்கு எப்படி கமல் சீட் ஒதுக்குவார்...ஏற்கனவே 3 கட்சிகளும் பிரித்துக் கொண்ட தொகுதிகளை குறைத்துக் கொண்டு, தேமுதிக.,விற்கு சீட் கொடுப்பாரா என அடுக்கடுக்காக கேள்வி எழுந்துள்ளது.
சரத்குமார் ஒப்புக் கொள்வாரா
அதிமுக கூட்டணியில் இருந்த வரை சரத்குமாருக்கும், திமுக கூட்டணியில் ஐஜேகே.,வுக்கும் ஒற்றை இலக்கத்திலேயே சீட் ஒதுக்கப்பட்டது. தற்போது கமல் 40 சீட்களை ஒதுக்கியதால் படு உற்சாகமாக தேர்தல் பணியில் சரத்குமாரும், பாரிவேந்தரும் ஈடுபட்டுள்ளனர். இப்போது தங்களுக்கு ஒதுக்கிய சீட்களை குறைத்துக் கொள்ள அவர்கள் ஒப்புக் கொள்வார்களா...அதிலும் தேமுதிக கேட்கும் 41 சீட் என்ற அளவிற்கு குறைக்க ஒப்புக் கொள்வார்களா..
திமுக நிலைமை என்ன
திமுக.,வை பொறுத்தவரை ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு 56 இடங்களை திமுக தலைமை ஒதுக்கி விட்டது. சிறிய கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தையை திமுக தொடர்ந்து வருகிறது. இப்போது தேமுதிக.,வையும் கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் திமுக போட்டியிடும் தொகுதிகளை வெகுவாகக் குறையும். 170 இடங்களுக்கு மேல் போட்டியிட வேண்டும் என்ற திமுக.,வின் திட்டம் நிறைவேறாது. குறைவான இடங்களில் போட்டியிட்டால், நாளை கூட்டணியில் பிரச்னை ஏற்பட்டால் அது திமுக.,விற்கு தான் பாதகமாக அமையும்.