தப்பு பண்ணிருச்சு காங்கிரஸ்.. பிரியங்காவை அன்றே களத்தில் இறக்கி விட்டிருக்க வேண்டும்!
ராகுல் காந்திக்கும் பிரியங்கா காந்திக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
Recommended Video
சென்னை: பிரியங்கா மட்டும் அன்னைக்கே நேரடி அரசியலுக்கு வந்திருந்தால்... இன்றைக்கு பாஜகவுக்கு, காங்கிரஸ் மிக வலுவான எதிரியாக மாறியிருக்கும்.
10 வருடத்திற்கு முன்பு ராகுல் கட்சிக்குள் தீவிரமாக இறங்கினார். தந்தை ராஜீவ் காந்தியை போலவே ராகுல்காந்தியும் திடீரென்று கிராமப்புறங்களுக்கு போனார், அங்கிருக்கும் ஒரு குடிசைக்குள் நுழைந்து, அந்த வீட்டில் செய்து வைத்த சப்பாத்தியை சாப்பிட்டு விட்டு அங்கேயே தூங்கினார்.
பல சமயம் ரோட்டோர டீக்கடையில் நின்று கொண்டு பொதுமக்களிடம் பேசிக் கொண்டே டீ குடிப்பார். இப்படி இளம் தலைவர் என்ற முறையில் ஒரு பாப்புலாரிட்டி கிடைத்ததே தவிர, பக்குவம் குறைந்துதான் காணப்பட்டது. ஒரு தலைவராக அவரை யாரும் பார்க்கவில்லை. ஜாலியான ஒரு இளைஞராகத்தான் கண்ணில் பட்டார்.
பலமுறை நெளிந்தனர்
யாரிடம் என்ன பேசுவது, என்ன மாதிரியான பேட்டிகளை உதிர்ப்பது என்றெல்லாம் தெரியாமலேயே ஆரம்பத்தில் திணறினார். 10 வருடத்திற்கு முன்பு தமிழகத்திற்கு ராகுல் வரும்போதெல்லாம் கூட்டணியில் இருந்த மூத்த தலைவரான கருணாநிதியை கூட சந்திக்காமல் திரும்பி சென்றிருக்கிறார். கூட்டணி தலைவர்கள் இந்த செயல்பாட்டினால் பலமுறை நெளிந்தார்கள்.
இத்தனை காலமா?
ஆனால் ஆர்ப்பாட்டம் இல்லாமல், அமர்க்களம் இல்லாமல் - அமைதியான முறையில் சோனியா செய்த எத்தனையோ சாதனைகளால் இதை பலரும் பெரிதுபடுத்தவில்லை. ஆனால் ரபேல் விவகாரத்திற்குப் பிறகுதான் ராகுல் அனைவராலும் கவனிக்கப்படத் தொடங்கினார். அவரை ஒரு முழுமையான தலைவராக பார்க்க இத்தனை காலம் தேவைப்பட்டிருக்கிறது.
தெளிவான பிரியங்கா
பிரியங்கா காந்தி அப்படி இல்லை. பாட்டியைப் போன்ற தோற்றம் மட்டும் இல்லை, அவரைப் போல்வே ஆழ்ந்த ஞானமும் கொண்டவர், கூரிய சிந்தனை, டக்கென முடிவெடுக்கும் பாங்கு. யாரிடமும் எப்படி பேசுவது, எப்படி அணுகுவது என அத்தனையிலும் தெளிவானவர் பிரியங்கா. அதை விட முக்கியமாக மக்களை அணுகுவதிலும் கூட நெருக்கத்தை உணர வைப்பார்.
கடைசி நேரம்
பிரியங்காவிடம் எதையும் பொறுமையுடன் அணுகும் பக்குவமும் ஆற்றலையும் காங்கிரசின் மூத்த தலைவர்கள் நிறைய சமயங்களில் நேரில் கண்டார்கள். குறிப்பாக சமீபத்தில் மத்தியப் பிரதேச, ராஜஸ்தான் மாநில முதல்வர்களைத் தேர்வு செய்வதில் திணறல் ஏற்பட்டபோது பிரியங்கா காந்தியின் ஆலோசனை கடைசி நேரத்தில் கை கொடுத்ததாக கூறப்பட்டது. ஆனால் அவரை தீவிர அரசியலுக்கு பயன்படுத்த சோனியாவும் சரி, ராகுலும் சரி நினைக்கவில்லை.
கடும் நெருக்கடி
10 வருடத்திற்கு முன்பே பிரியங்கா அரசியலுக்குள் நுழைந்திருந்தால், சோனியா உடல்நலத்துடன் இருக்கும்போதே அவருடன் இணைந்து கை கோர்த்திருந்தால், இன்றைக்கு உபி மட்டுமல்ல, பல மாநிலங்களில் பாஜகவை தலைதூக்க விட்டிருக்க மாட்டார். அதற்காக ராகுல் காந்தியை குறைத்து மதிப்பிட முடியாது. இருப்பினும் பிரியங்காவும், ராகுலும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல இறக்கி விடப்பட்டிருந்தால் மேலும் பல கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியில் முன்பே குடியேறி பாஜகவுக்கு பெருத்த நெருக்கடியை ஏற்படுத்த உதவியிருக்கும்.
பலமான எதிரி
பாஜகவுக்கு எதிரே இப்போது நிற்கும் காங்கிரஸை பலமான எதிரியாக இன்னும் கூட சொல்ல முடியாது. அந்த நிலையில்தான் உ.பியில் களம் இறக்கி விடப்பட்டுள்ளார் பிரியங்கா. அங்கு காங்கிரஸ் வென்றால் அது உலக சாதனையாக பார்க்கப்படும். அப்படிப்பட்ட நிலையில்தான் காங்கிரஸ் பரிதாபமான நிலையில் அங்கு உள்ளது. மாயாவதி, அகிலேஷை அவர் தன் பக்கம் ஈர்த்து, இணைந்து நின்றால் மட்டுமே வரலாற்றுச் சாதனைக்கு வாய்ப்புண்டு. அதை பிரியங்கா செய்வாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும்.
பலம் சேர்க்கும்
ஒரு மாநிலத்தின் பொறுப்பு மட்டும் அளிக்கப்பட்டாலும், பிரியங்காவின் ஆலோசனைகள் ஒட்டுமொத்த கட்சிக்கு வலு கொடுக்கும். அதேபோல கட்சிக்கு ராகுல் தலைவராகவே இருந்தாலும், பிரியங்கா மீது தான் இந்தியர்களின் கவனம் எப்போதும் வீழ்ந்து கிடக்கும். இது தேசிய அளவில் காங்கிரஸுக்குப் பலம் சேர்க்கும். உபி.யில் கை கொடுக்காவிட்டாலும் கூட பிரியங்காவை வைத்து தேசிய அளவில் அதிரடி காட்டுவதே காங்கிரஸின் உள் திட்டமாக இருக்கும் என்று தெரிகிறது.