ஹிஜாப் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு.. தாமதமாகும் நீதி மறுக்கப்பட்ட நீதி! ஜவாஹிருல்லா வேதனை!
சென்னை: ஹிஜாப் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வந்துள்ள நிலையில் தாமதமாகும் நீதி மறுக்கப்பட்ட நீதி என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
கர்நாடக முஸ்லிம் மாணவியர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பேரிடராக உள்ளது எனக் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக் அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் வருமாறு;
“பூணூல்” முதல் “திலகம்” வரை.. ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதங்கள்
ஹிஜாப் வழக்கு
''ஹிஜாப் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவில் இன்று இரு நீதிபதிகள் கொண்ட உச்சநீதீமன்ற அமர்வு முரண்பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. இரு நீதிபதிகளில் ஒருவரான நீதியரசர் சுதான்சு துலியா ஹிஜாபிற்கு தடைவிதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து வழங்கியுள்ள தீர்ப்பு நியாயமானதாக உள்ளது. பீஜோ இமோனுவல் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் நீதியரசர் தூலியா ஹிஜாப் அணிவதை தடை செய்வதற்கு முகாந்திரம் இல்லை என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.''
பெண் குழந்தைகள்
''பெண் குழந்தைகள் கல்வி கற்பதின் அவசியத்தை தனது தீர்ப்பில் முன்னிலைப்படுத்தியுள்ள நீதியரசர் தூலீயா பெண் கல்விக்கு அரசோ சமுதாயமோ எவ்வித முட்டுக்கட்டையும் போடக் கூடாது என்று அறிவார்ந்த நிலைப்பாட்டை எடுத்து ஹிஜாப் மீதான் தடையை நீக்கியுள்ளார்.
ஆனால் நீதியரசர் ஹேமந்த் குப்தா இதற்கு நேர்மாற்றமான நிலைப்பாட்டை எடுத்து கர்நாடக உயர்நீதிமன்றம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு விதித்த தடை சரியென தீர்ப்பு வழங்கியுள்ளார்.''
பேரிடரான தீர்ப்பு
''இதன் விளைவாக இந்த வழக்கு மற்றொரு விரிவான அமர்விற்கு முன்பு விசாரணைக்கு அனுப்புவதற்காக தலைமை நீதிபதிக்கு அனுப்பபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. நீதிபதி தூலியா அவர்கள் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது போல் ஹிஜாபிற்கு தடைவிதிப்பது பெண் கல்விக்கு போடப்படும் முட்டுக்கட்டை தான். இதனை நீக்கும் வகையில் தீர்ப்பு வழங்கப்படும் எதிர்ப்பார்ப்பில் இருந்த கர்நாடக முஸ்லிம் மாணவியர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பேரிடராகும்.''
தாமதிக்கப்படும் நீதி
''தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி என்ற முதுமொழிக்கேற்ப இன்றைய தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த வழக்கு மீண்டும் விரிவான அமர்வில் விசாரிக்கப்பட்டு விரைந்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் கேட்டு கொள்கிறேன்.'' இவ்வாறு ஜவாஹிருல்லா தனது பதிவில் கூறியிருக்கிறார்.