விஜய் கொடுத்த வைர நெக்லஸ்.. திண்டுக்கல் நந்தினி என்ன செய்ய போகிறார் தெரியுமா?.. உருக்கமான முடிவு
சென்னை: பிளஸ் 2 தேர்வில் 600- க்கு 600 மதிப்பெண்களை பெற்ற திண்டுக்கல் சாதனை மாணவி நந்தினிக்கு விஜய் வைர நெக்லஸை பரிசாக கொடுத்த நிலையில் அதை அவர் என்ன செய்ய போகிறார் என்பதை தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வில் அனைத்து பாடங்களிலும் 600-க்கு 600 மதிப்பெண்களை பெற்று திண்டுக்கல் அண்ணாமலையார் அரசு உதவி பெறும் பள்ளி மாணவி நந்தினி சாதனை படைத்துள்ளார். இவர் தற்போது கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் படிப்பில் சேர்ந்துள்ளார்.

மேலும் வைரமுத்து மேகங்கள் கலைகின்றன என்ற படத்திற்காக அவருக்கு தயாரிப்பாளர் கொடுத்த தங்க பேனாவை நந்தினியின் வீட்டுக்கே சென்று வைரமுத்து கொடுத்தார். தமிழகமே இந்த மாணவியை கொண்டாடி வருகிறது.
ஏழ்மை நிலையிலும் அதை பொருட்படுத்தாமல் தன் குடும்பத்தை மேலும் முன்னேற வைக்க வேண்டும் என்ற வெறியில் படித்த மாணவிக்கு பாராட்டுகள் குவிகின்றன. இந்த நிலையில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது. இதில் 234 தொகுதிகள் வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விஜய் விருது வழங்கினார்.
அதில் முதலில் 600- க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற நந்தினிக்கு சான்றிதழுடன் வைர நெக்லஸை விஜய் பரிசாக கொடுத்தார். இந்த நெக்லஸை மாணவியின் கழுத்தில் போட்டு விடுமாறு விஜய் அவருடைய தாயிடம் கேட்டுக் கொண்டார். இந்த நெக்லஸின் விலை ரூ 10 லட்சம் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நந்தினி விருது பெற்றது குறித்து ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் விஜய்யை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
அவர் நெக்லஸ் கொடுத்த நிமிடத்தை நான் மறக்கவே மாட்டேன். நான் தங்கத்தில் கூட நெக்லஸ் போட்டதில்லை. அதற்கான வசதி எங்களுக்கு இல்லை. விஜய் நடித்ததில் எனக்கு மெர்சல் படம் மிகவும் பிடிக்கும். அவர் நிஜத்திலும் ஹீரோதான். மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்துவதற்காக பல கோடி செலவு செய்திருக்காரு. இந்த வைர நெக்லஸை கடைசி வரை பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருப்பேன்.
விஜய் சார் கொடுத்த வைர நெக்லஸ் 2 அல்லது 3 லட்சம் இருக்கும் என்கிறார்கள். இந்த நெக்லஸை எந்த காரணத்திற்காகவும் நாங்கள் கேட்க மாட்டோம் என என் அப்பாவும் அம்மாவும் சொல்லிவிட்டாராகள். ஊர்ல இருக்கிறவங்கலாம் என்னை வந்து நேரில் பாராட்டி வராங்க. விஜய் சார் மேடையில் நடந்து கொண்ட விதம் எங்களை ஆச்சரியப்படுத்தியது.
விழா முடியும் வரை எல்லா மாணவர்களும் அங்குதான் இருந்தோம். விஜய் சாரும் அங்குதான் கடைசி வரை இருந்தார். மேடைக்கு வந்ததிலிருந்து ஒரு ஜூஸ் கூட குடிக்கவில்லை. சாப்பிட வில்லை. எல்லாரையும் அன்பா உபசரித்தாரு. மாணவர்கள எல்லாம் எந்த மாதிரி போட்டோ எடுக்க விரும்பினார்களோ அதே போல் முகம் சுளிக்காமல் எடுக்க ஒப்புக் கொண்டாரு. இதனால் அவர் மேலே இருந்த மரியாதை இன்னும் அதிகமாகிடுச்சி.
என் அம்மா, அப்பாவும் விஜய் சாரின் செயல்களை பார்த்து பிரமிச்சி போய்ட்டாங்க. அவரால் அவ்ளோ நேரம் எப்படித்தான் நிற்க முடிஞ்சதுனே தெரியவில்லை. எனக்கு கிடைத்த இந்த அங்கீகாரம் எல்லாம் எனது படிப்புக்கு கிடைத்த பரிசு. விஜய் சார் இப்படி பாராட்டியதில் இன்னும் சாதிக்க வேண்டும் என்ற ஊக்கம் கிடைத்துள்ளது. இவ்வாறு நந்தினி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications