மீண்டும் வெடித்த வடகலை - தென்கலை மோதல்.. காஞ்சிபுரம் கோவிலில் பரபரப்பு!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவத்தில் மீண்டும் வடகலை, தென்கலை பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பிரபந்தம் பாடுவதில் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் கங்கை கொண்டான் மண்டபத்தில் கண்டருளியபோது பிரபந்தம் பாடுவதில் இருபிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிரமோற்சவத்தின் 2 ஆம் நாளான இன்று அம்ச வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

அப்போது திவ்ய பிரபந்தம் பாடுவது தொடர்பாக வடகலை - தென்கலை பிரிவினர் இடையே பிரச்சனை ஏற்பட்டது. பிரபந்தம் பாடிக் கொண்டிருந்த எதிர் தரப்பினர் கூச்சல் எழுப்பியதால் அங்கு சிறிது நேரம் சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது. வடகலை பிரிவினர் பெருமாள் முன்பு தாத்தாச்சாரியார்கள் மந்திர புஷ்பம் பாடுவதில் இடையூறு ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டினர்.
வடகலை - தென்கலை பிரிவினர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கோவில் நிர்வாகத்தினர் தலையிட்டு சமாதானம் செய்து வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications