Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் அகத்தியர் புராணத்தை ஆராய்ச்சி செய்வதா? கி.வீரமணி கடும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: செம்மொழித் தமிழாய்வு நிறுவனம், அகத்தியர் குறித்த புராணச் செய்திகளை, ஆராய்ச்சி செய்கின்றோம் என்ற போர்வையில் ஆர்.எஸ்.எஸ். கருத்துகளைக் காவிக் கும்பல் கல்விப்புலங்களில் விதைத்து வருவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கி.வீரமணி கூறியதாவது: கடந்த ஒரு வாரமாக இந்திய அளவில் உள்ள பார்ப்பனர்களும், பார்ப்பன ஆதரவாளர்களும் தமிழ்நாட்டில் உள்ள தமிழ்ச்சங்கங்கள், கல்வி நிறுவனங்களைத் தொடர்புகொண்டு, அகத்தியரைப் பற்றிய கருத்தரங்குகள் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகள், சொற்பொழிவுகளை நடத்துமாறும் அதற்கு மத்திய அரசு நிறுவனங்களின் வழியாக செலவுக்குரிய தொகையை அளிக்கின்றோம் என்றும் கூறி, பொம்மை துணைவேந்தர்களைத் துணைகொண்டு, அகத்தியர் குறித்த கருத்தரங்குகளை நடத்தி வருகின்றனர். இந்தச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

kashi tamil sangamam tamilnadu veeramani


செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் புவனேஸ்வரி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். செம்மொழி இலக்கியங்களை ஆராய்ச்சி செய்வதற்குத் தொடங்கப்பட்ட செம்மொழி நிறுவனம், வேதம், புராணம், இதிகாசம், ஜோதிடம், யோகா, ஞானம், வர்மம் குறித்து ஆராய்ச்சி செய்யவும் அவற்றைப் பரப்பவும் தொடங்கியிருப்பது – தமிழர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய செயலாகும்!

தமிழ் மொழியின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம், சங்க இலக்கியங்களைப் பரப்ப வேண்டிய செம்மொழி நிறுவனம் அதன் கொள்கைகளுக்கு எதிராக நடப்பதைத் தமிழர்கள் வேடிக்கை பார்க்கமாட்டார்கள். செம்மொழி நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில் தமிழ்நாடு முதலமைச்சர் இந்தச் செயலை ஆராய்ந்து, தக்க நடவடிக்கை எடுக்குமாறும் செம்மொழி நிறுவனத்தையும் அதன் நோக்கத்தையும் பாதுகாக்குமாறு நாம் உரிமையோடு கேட்டுக் கொள்கின்றோம்.

சர்ச்சைக்குப் பெயர்பெற்ற இந்த செம்மொழி நிறுவனத்திற்கு அண்மையில் மருத்துவர் சுதா சேஷையன் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார் – தமிழ் படிக்காத பார்ப்பனர் அம்மையார் – வேறு துறையில் படித்த ஒருவரை செம்மொழி நிறுவனத்துக்குத் துணைத்தலைவராக நியமித்தமையை அறிந்த தமிழறிஞர்கள் பலர் அப்பொழுதே அச்செயலைக் கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டனர்.

ஆனாலும் அவர் தொடர்ந்து செம்மொழி நிறுவனத்தின் துணைத்தலைவராக நீடித்து நாளும் பார்ப்பன விஷக் கருத்துகளைப் பரப்பி வருகின்றார். புராணங்களை இலக்கியங்களாகவும், வரலாறாகவும் திரிக்கும் வேலையில் ஈடுபடுகிறார். தம்மை துணைத்தலைவராக நியமித்த மத்திய அரசுக்குத் தன் விசுவாசத்தைக் காட்ட, அகத்தியர் என்ற ஒரு புதுக்கரடியை நிறுவனத்தின் வழியாக சுதா சேஷையன் உலவவிட்டுள்ளார்.

முன்பு தமிழ்நாட்டு மக்கள் பல நூற்றாண்டுகளாக வழிபட்ட முருக வழிபாட்டைச் சீர்குலைக்க, ஆரியப் பார்ப்பனர்கள் விநாயகன் என்ற ஒரு கட்டுக்கதையை முற்காலத்தில் கட்டி, விநாயகனை முருகனுக்கு அண்ணனாக்கியதைப் போன்று, தொல்காப்பியரையும் தொல்காப்பியத்தையும் பின்னுக்குத் தள்ளி, அகத்தியரை முதலிடத்துக்குக் கொண்டுவர நினைத்து பார்ப்பனர்கள் செயலாற்றி வருகின்றனர்!

அகத்திரைப்பற்றி புராண அளப்புகளை அள்ளிவிடும் பார்ப்பனர்கள் வடமொழிக்காரர்கள் அகத்திய முனிவரைச் சிவன் தென்பகுதிக்கு அனுப்பி, இமயமலை உயர்வு தாழ்வைச் சரிசெய்தார் என்றும், புரட்டோடு – அகத்தியரின் கெண்டிச்சொம்பைக் காக்கைத் தள்ளிவிட, அந்தக் கெண்டிச்சொம்பு தண்ணீர் தான் காவிரியாக ஊற்றெடுத்து வருகின்றது எனவும் பல்வேறு கட்டுக்கதைகளை ஆன்மிகவாதிகளின் வழியாக விதைத்தனர். அந்தப் பொய் விதைகள் முளைத்து, இன்று பரந்து காடாகி நிற்கின்றன.

இந்திய அரசமைப்புச் சட்டம் 51A(h) அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்பதற்கு எதிராக செயல்படுவதை எப்படி ஏற்க முடியும்?
அகத்தியர் இலக்கணம் எழுதினார், தேவாரத்தைத் தொகுத்தார், சித்தர் பாடல்களை எழுதினார், தலைச்சித்தர் இவர்தான் என்பது போன்ற அறிவுக்குப் பொருந்தாத உண்மைக்கு மாறான கருத்துகளைப் பார்ப்பனர்களும், பார்ப்பன அடிவருடிகளும் விதைத்து வந்தனர்.

இம்மாதிரியான புரட்டுகளை இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் உண்மையாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இரா.சந்திரசேகரன், சுதா சேஷையன், மாலன், கோதை ஜோதிலட்சுமி குழுவினர் ஏடுகளில் எழுதியும், மேடைகளில் பேசியும் வருவதைப் பகுத்தறிவுவாதிகள் எள்ளி நகையாடவே செய்வர். இதற்கு மூலஸ்தானம் தமிழ்நாடு அரசின் சம்பளம் பெறும் ஆளுநரே!
பார்ப்பனீயத்தைப் பரப்பிட மத்திய அரசின் பெருநிதி இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள், தமிழ்ச்சங்கங்கள், பள்ளிகளைக் குறிவைத்து மாணவர்களுக்கு அகத்தியர் குறித்த போட்டிகளை, கருத்தரங்குகளை அறிவித்து செயல்படுத்திட தமிழ்நாடு - புதுவை முழுவதும் சூறாவளிப் பயணத்துக்குக் காவிக் கும்பல் திட்டமிட்டுள்ளது். இதற்காகக் கோடிக்கணக்கான ரூபாய் இந்திய அரசாங்கத்தின் பணம் வாரியிறைக்கப்பட உள்ளது. பதவி, பணம், அதிகாரத்துக்கு அலையும் சில தமிழ்நாட்டுப் பேராசிரியர்கள் இந்த அகத்தியர் கூட்டத்தின் அடிமனது எண்ணங்களைப் புரிந்துகொள்ளாமல், தங்கள் நிறுவனங்களில் அகத்தியர் கருத்தரங்குகளுக்கு ஆதரவு நல்கி, போர்க்கால அடிப்படையில் நடத்தி வருவது அறிவுலகத்தை வெட்கித் தலைகுனியச் செய்யும் செயலாகும். இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+