"26".. புரட்டி போட்ட கூட்டம்.. மோடி Vs இந்தியா.. "அங்க ஒரு கண்ணு வைங்க".. பின்னாடியே வந்த கி. வீரமணி
சென்னை: "மக்கள் செல்வாக்கை இழந்துவிட்ட பாஜக கூட்டணி, வாக்குப் பெட்டிகள் மீது குறி வைக்கும். அதையும் காவல் காக்கும் பணியும், கடமையும், 26 கட்சிகளின் கூட்டணிக்கு உண்டு'' என்று தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், திராவிடர் கழக தலைவருமான கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் எதிர்க்கட்சிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தின் அதிர்வலைகள் இன்னமும் அடங்கவில்லை.. முதலிவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக திருமாவளவன், பேராசிரியர் ஜவாஹிருல்லா என பலரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். கூட்டத்தில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் என முக்கிய எதிர்க்கட்சிகள் பங்கேற்ற, இந்த கூட்டணிக்கு I-N-D-I-A (இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி) என்ற புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதாவது, Indian National Developmental Inclusive Alliance - INDIA இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி என எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
புதிய பெயர்: "இந்தியா" என்ற பெயரே மோடிக்கு எதிராக நிறுத்தப்பட்ட பெயராகவும் சலசலக்கப்பட்டு வரும் நிலையில், பாஜக தரப்பு கடுப்பாகி உள்ளதாக சொல்கிறார்கள். இந்நிலையில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் உள்ளதாவது:
"இந்திய ஜனநாயகத்தையும், அதன் வழிகாட்டி நெறியாக இருந்து வழிகாட்டியாக உள்ள இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்க, இந்தியா என்ற நமது நாட்டின் காவலர்களாக ஆகி, இன்றைய ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஆட்சியின் எதேச்சதிகார, அடக்குமுறைக் கொடும் கதிர்வீச்சுகளிடமிருந்து மீட்டெடுக்கும் ஓர் அரிய முயற்சிக்குப் பல்வேறு முக்கிய எதிர்க்கட்சிகளும் ஓர் அணியில் திரண்டு வந்து நிற்பது, வரவேற்கத்தகுந்த சீரிய முயற்சியாகும்! நாட்டில் இப்போது அறிவிக்கப்படாத நெருக்கடி காலம் நடைமுறையில் இருக்கிறது.
வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ முதலிய மூன்றும் இவர்களைப் பொறுத்து எதிர்க்கட்சியினரைக் கைது செய்து அழிக்கப் பயன்படும் 'திரிசூலங்களாக' நாளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதை உச்சநீதிமன்றமே பல வழக்குகளில் தீர்ப்பின்மூலம் வெளிப்படுத்தி உள்ளது வெள்ளிடை மலை!
காலி: தேர்தல் ஆணையத்தின் குறிப்பிட்ட உறுப்பினர்களுக்குத் தொடர்ந்து பல ஆண்டு, பல தடவை தொடர் பதவி நீடிப்புகள், அமலாக்கத்துறையில் பதவி நியமனம், பதவி நீடிப்பு மூன்றாவது முறை செல்லாது என்ற தீர்ப்பு, எதிர்க்கட்சியைச் சார்ந்தவரை மக்களவை துணைத் தலைவர் நியமனமே செய்யாமல், நான்கரை ஆண்டுகளும் காலியாகவே அவை நடத்தப் பெறும் அதிசய ஜனநாயகம் - இப்படி எத்தனையோ!
இவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற, 'இந்தியா' நான்கு எழுத்து எதிர்க்கட்சிக் கூட்டணி (INDIA) எந்த கர்நாடகம் - தென் மாநிலம் பா.ஜ.க.வை வெளியேற்றி தென்னகத்தில் பா.ஜ.க. No Entry - நுழைய முடியாதபடி செய்ததோ அங்கேயே, பாட்னாவுக்கு அடுத்தபடி பெங்களூருவில் கூடிய 26 கட்சிகள் பிரகடனப்படுத்தியுள்ளது, புதிய நன்னம்பிக்கை முனையாகும்!
வித்தைகள்: கடந்த காலங்களில், மக்களின் அமோக ஆதரவினால் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஆட்சி அமைந்துவிடவில்லை. சில தேர்தல் வித்தைகளினாலும், உத்திகளினாலும் பண பலம், பத்திரிகைகளின் பலம், பல வகையான ஆள்களின் திரட்டு பலம்மூலம் - அதுவும் வெறும் 37 சதவீத வாக்காளர்களாலேயே ஆட்சியைப் பிடித்த கட்சி. 63 சதவீத பெரும்பான்மை மக்கள் பிரதமர் மோடி தலைமைக்கு எதிராக இருந்தனர்;
இப்போது அவ்வெண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துள்ளது என்பதற்கு அடையாளம் பிரதமர் மோடி பல நாள்கள் பிரச்சாரம் செய்தாலும்கூட, பா.ஜ.க.வுக்குத் தோல்விதான் மிச்சம் என்ற நிலைக்கு கர்நாடகம், அதற்குமுன்பு இமாச்சல பிரதேசம் போன்ற பல எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களே சாட்சியங்களாகும்.
ஊடக வெளிச்ச வித்தை: பாட்னா கூட்டத்திற்குப் பிறகு மத்திய பிரதேசத்திற்குச் சென்ற பிரதமர் மோடி, தி.மு.க.விற்கு எதிராகக் கடுமையாக பேசியது, அவரது நிலைகுலைவைக் காட்டியது. அதன்பிறகு நேற்று (18.7.2023) டெல்லியில் பல போணியாகாத, நாடாளுமன்ற உறுப்பினர்களே இல்லாத சில கட்சிகளின் துணைக்கொண்டு கட்சிகளின் எண்ணிக்கையை 36 என்று பெருக்கி, ஊடக வெளிச்ச வித்தைகளில் ஈடுபட்டு வருறார்!
அவரது அரசின் அடக்குமுறை வீச்சும், அச்சுறுத்தும் பேச்சும், அந்த நிலைகுலைவிலிருந்து அவரது கட்சி மீளாதது மட்டுமல்ல, நாளும் கோபத் தீயில் குதித்து, தோல்வியைத் தழுவிட ஆயத்தமாகி வருவது காலத்தின் கட்டாயம்! எது எப்படியாயினும் இந்தக் காவிகளை ஆட்சியிலிருந்து அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர். வடக்கு முதல் தெற்குவரை - கிழக்குமுதல் மேற்குவரை.
திராவிட மாடல்: மற்றொரு அமைதிப் புரட்சி - வாக்குப் பெட்டி மூலமே இருப்பதால், இனிமேல் பா.ஜ.க., அதில் குறியாய் இருந்து வியூகம் வகுக்க முனையக்கூடும்; எதிர்க்கட்சிக் கூட்டணியினர் அதிலும் கண் வைத்து, காவல் பணி செய்து கடமையாற்றிடவும் வேண்டும்! நமது 'திராவிட மாடல்' ஆட்சிதான் இதற்குத் தொடக்க நம்பிக்கை ஒளி - வெற்றி மக்களுக்கே" என்று மூத்த தலைவர் கி.வீரமணி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications