"பொங்கல் பரிசு பத்தாது.. ரூ. 2,500, இலவச வேட்டி, சேலை, கரும்பு வழங்கணும்!" விஜயகாந்த் கோரிக்கை
சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் பரிசாக ரூ.2500 ரொக்க பணத்துடன் வேட்டி, சேலை, கரும்பு வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த பரிசுகள் வழங்கப்படும். இந்தாண்டு பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
2022இல் பொங்கல் பரிசுத் தொகை இல்லாமல், பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை என 21 பொருட்களைக் கொண்ட பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இருப்பினும், பல இடங்களில் பொருட்கள் தரமானதாக இல்லை என்ற புகார்கள் எழுந்தன.
இதனிடையே கடந்த 19ஆம் தேதி அடுத்தாண்டு பொங்கல் விழாவுக்குப் பரிசு தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. அது தொடர்பான அறிவிப்பும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
ரொம்ப முக்கியம்! பொங்கல் பரிசை வாங்க ரேஷன் கடைக்கு யார் செல்ல வேண்டும்? தமிழக அரசின் உத்தரவு
பொங்கல் பரிசு
அதில் அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வருகிற 2023-ம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000/- வழங்கிட முடிவு செய்யப்பட்டது. தமிழக முதல்வர் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை 2-ம் தேதி சென்னையிலும், அன்றைய தினமே மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள்" என்று கூறப்பட்டிருந்தது.
வலியுறுத்தல்
வரும் 2ஆம் தேதி முதல் பொங்கல் பரிசை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த காலங்களில் பொங்கல் பரிசுடன் கரும்பும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். இருப்பினும், இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மட்டுமே இடம்பெற்றுள்ளது. கரும்பு தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் இல்லை. இதனால் வழக்கம் போல அரசு கொள்முதல் செய்யும் என நம்பி கரும்பைப் பயிரிட்ட விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். கரும்பைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
விஜயகாந்த் அறிக்கை
இதற்கிடையே பொங்கல் விழாவுக்கு ரூ.2500 ரொக்க பணத்துடன் வேட்டி, சேலை, கரும்பைத் தமிழ்நாடு அரசு வழங்க முன்வர வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்குத் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த 2021ல் அதிமுக ஆட்சியின் போது அரிசி, வெல்லம், கரும்பு என 21 பொருட்களுடன் ரூ.2500 பரிசு வழங்கப்பட்டது. ஆனால் 2022 திமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பாகப் பச்சரிசி, வெல்லம், நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டன. பொங்கல் பரிசில் ரொக்கப்பணம் இல்லை. மேலும் பொங்கலுக்கு வழங்கப்பட்ட பொருட்களின் தரம் குறித்து விமர்சனங்களும் அப்போது எழுந்தன.
ரொக்க பணம் குறைவு
இந்த நிலையில் 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கமும் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரையும் வழங்கப்படும் எனத் தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. மேலும் பொங்கல் பரிசில் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறவில்லை. அறிவிக்கப்பட்ட ரொக்கப்பணமும் குறைவாக உள்ளது. ஏற்கனவே சொத்து வரி, மின் கட்டணம் மற்றும் விலைவாசி உயர்வால் மக்கள் பல்வேறு துயரங்களைச் சந்தித்து வரும் நிலையில், பொங்கல் பரிசாக ரூ.1000 மட்டும் வழங்கப்படும் என அறிவித்திருப்பதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
ரூ 2,500 ரொக்கம்
கடந்த அதிமுக ஆட்சியில் 21 பொருட்களுடன் ரூ.2500 ரொக்கமும் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. தற்போது பொங்கல் பொருட்கள் குறைக்கப்பட்டதுடன், ரொக்கமும் குறைவாக அறிவித்திருப்பது ஏழை எளிய மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழக அரசு மறு பரிசீலனை செய்து, தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை, தமிழக மக்கள் அனைவரும் மன நிறைவோடு சிறப்பாகக் கொண்டாடும் வகையில் கடந்த ஆட்சியில் வழங்கிய குறைந்தபட்சம் 2500 ரூபாயாவது உயர்த்தி வழங்கிட வேண்டும். மேலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவச வேட்டி சேலை வழங்கிட வேண்டும்.
செங்கரும்பு
பொங்கல் பரிசில் கரும்பு இடம் பெறாததைக் கண்டித்து தமிழக விவசாயிகள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் விளைவித்த செங்கரும்பை அரசு கொள்முதல் செய்து, பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் வழங்கி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இந்த பொங்கல் தித்திக்கும் பொங்கலாக அமைய இந்த அரசு நல்ல அறிவிப்பை வெளியிட வேண்டும்" என்று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.