சிக்ஸர் அடிக்கும் எடப்பாடியார்.. கோடியை கொட்டி கொடுத்தும் எடுபடலையே.. கவலையில் அறிவாலயம்!
சென்னை: பந்தை எப்படி போட்டாலும் அதை சிக்ஸராக முதல்வர் எடப்பாடியார் அடித்து வருவதால் என்னதான் கலர் கலராக பிரச்சாரம் செய்தாலும் எடுபடவில்லையே என்ற கவலை இப்போதே அண்ணா அறிவாலயத்தை தொற்றிக் கொண்டது.
சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் ஒவ்வொரு கட்சியும் தேனீக்கள் போல் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் அதிமுகவும் திமுகவும்தான் பம்பரம் போல் சுழல்கின்றன.
இந்த சட்டசபை தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற ஒரு "வெறியில்" திமுக தேர்தல் வியூகத்தை வகுக்கும் ஐபேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
பீகார் சட்டசபை தேர்தல்
2014 நாடாளுமன்றத் தேர்தல், பீகார் சட்டசபை தேர்தல், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வரான தேர்தல் உள்ளிட்டவைகளுக்கு ஐபேக் நிறுவனத்தின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான அணிதான் வியூகம் வகுத்து கொடுத்துள்ளது. அதனால் எப்படியும் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் இவர்களை திமுக புக் செய்து கொண்டது.
பிரச்சாரம்
ஜெகன்மோகன் ரெட்டிக்கு பாதயாத்திரை சொன்னது போல் ஸ்டாலினுக்கும் கலர் கலராக வேறு வேறு பெயர்களில் பிரச்சார வியூகங்களை பிகே சொல்லியுள்ளார். அதன்படி ஒன்றிணைவோம் வா, விடியலை நோக்கி ஸ்டாலின் குரல், மக்கள் கிராம சபை, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயர்களில் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த புதிய ஸ்டைல் இவருக்கு கை கொடுக்குமா என்பது தேர்தல் முடிவுகளில்தான் தெரியும்.
100 நாட்கள்
இவர் போகும் இடமெல்லாம் குழந்தைக்கு பெயர் வைக்கவும், குறைகளை கொட்டவும், ஸ்டாலினுடன் கைகுலுக்கவும், செல்பி எடுத்துக் கொள்ளவுமே மக்கள் வருவதாக தகவல்கள் கூறுகின்றன. ஸ்டாலின் போகும் ஒவ்வொரு இடங்களிலும் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டியில் உள்ள கோரிக்கைகள் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களில் தீர்க்கப்படும் என்கிறார் ஸ்டாலின்.
1100 எண்
அது போல் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார். ஆனால் முதல்வரோ , எதிர்க்கட்சித் தலைவர் 8 அடி பாய்ந்தால் அவர் 16 அடி பாய்ந்து தனது ஆட்சி மீதான குற்றச்சாட்டுகளை களைத்து விடுகிறார். ஆட்சிக்கு வந்தவுடன்தானே உங்களால் குறைகளை தீர்க்க முடியும், நான் இப்போதே தீர்க்கிறேன் என்று சொல்லாமல் சொல்லியடித்து 1100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு முதல்வர் அறிவித்தார்.
ஓவர்டேக்
அது போல் ஆட்சிக்கு வந்து விவசாயக் கடன்களை ரத்து செய்வதா, நான் இப்போதே செய்கிறேன் என கடன்களை ரத்து செய்துவிட்டு அதற்கான ரசீதையும் அவர் வழங்கிவிட்டார். ஸ்டாலினை முதல்வர் ஓவர்டேக் செய்து வருவதால் வேறு பாணியை பாருங்கள், தமிழகமே உற்றுநோக்கும் அளவில் வியூகங்கள் தேவை என ஐபேக் நிறுவனத்தை அறிவாலயத்தினர் உலுக்கி வருகிறார்களாம்!. ஐபேக்கிற்கு கோடி கோடியாக கொட்டி கொடுத்தும் ஒன்றும் கை கூடுவது போல் தெரியவில்லையே என உடன்பிறப்புகளும் ஒரே கவலையில் உள்ளார்களாம்.