அமைச்சர் சேகர்பாபுவுக்கு செக் வைத்த ஸ்டாலின்.."அவரை" ராஜ்யசபா எம்பி ஆக்குவது இதற்கு தானாம்! பின்னணி
சென்னை: மாநிலங்களவை தேர்தலுக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர் தேர்வு குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு உட்பட மொத்தம் 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவி விரைவில் காலியாகிறது.
4 ஆண்டு விசாரணை... தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல்
புதிய மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 10ஆம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 24ஆம் தேதி தொடங்கவுள்ளது.
தேர்தல்
இதில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் மற்றும் அதிமுகவின் நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. தற்போது தமிழக சட்டசபை உள்ள உறுப்பினர்களை வைத்துப் பார்க்கும்போது, காலியாகும் 6 இடங்களில் 4 இடங்கள் திமுகவுக்கும், 2 இடங்கள் அதிமுகவுக்கும் செல்லும்.
திமுக வேட்பாளர்கள்
இதில் திமுக 3 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே சமீபத்தில் தான் மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் திமுக சார்பில் தஞ்சை சு.கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.ஆர்.என்.ராஜேஸ்குமார்
இதில் தற்போது எம்பியாக உள்ள கே.ஆர்.என்.ராஜேஸ்குமாரின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் வைத்தியலிங்கம் கடந்த 2021 தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட வென்ற நிலையில், அவரது ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்திருந்தார். அப்போது காலியான இடத்திற்குத் தான் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் கொண்டுவரப்பட்டார். ஒரு ஆண்டு மட்டுமே அவர் அவர் எம்.பி.யாக இருந்ததால், அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கிரிராஜன்
ராஜ்ய சபா தேர்தலுக்கு இரா.கிரிராஜனை திமுக தலைமை டிக் அடித்ததும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களில் திமுக சட்டப்பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கிரிராஜன் முதன்மையானவர். இரா.கிரிராஜன் எம்பி ஆக்குவதன் மூலம் அமைச்சர் சேகர்பாபுவுக்கு செக் வைத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். ஏனென்றால் கிரிராஜன் வட சென்னையைச் சேர்ந்தவர்.
சேகர்பாபு
வடசென்னையைத் தனது ஆளுகைக்குள் பல ஆண்டுகளாக வைத்திருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு. ராஜ்யசபா எம்.பி.யாக கிரிராஜனை ஸ்டாலின் தேர்வு செய்திருந்தது சேகர்பாபுக்கு தெரியாதாம். இது குறித்து ஸ்டாலின், சேகர்பாபுவிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லையாம். வேட்பாளர் அறிவிப்பு வந்ததும் எல்லோருக்கும் தெரிந்தது போலத்தான் சேகர்பாபுவுக்கும் தெரிந்துள்ளது.
ஆலோசிப்பதில்லை
இது குறித்து திமுக தரப்பில் விசாரித்தபோது, "வடசென்னையைப் பொறுத்தவரை எந்த விசயமாக இருந்தாலும் சேகர்பாபுவிடம் கலந்தாலோசிப்பார் ஸ்டாலின். அவரது சிபாரிசுக்கு ஸ்டாலினிடம் மரியாதை உண்டு. ஆனால், சென்னை மேயர் தேர்வில் ஏற்பட்ட சர்ச்சைகள் ஸ்டாலினுக்கும் சேகர்பாபுவுக்குமான நெருக்கத்தில் சற்று இடைவெளியை ஏற்படுத்திவிட்டது. சேகர்பாபுவிடம் முன்புபோல எல்லாவற்றையும் ஆலோசிப்பதில்லை ஸ்டாலின்.
சென்னை அமைச்சர்கள்
அந்த வகையில், ராஜ்யசபாவுக்கு கிரிராஜனை தேர்வு செய்தது குறித்து சேகர்பாபுவிடம் ஒரு வார்த்தைகூட ஸ்டாலின் பேசவில்லை. ஏற்கனவே, தென்சென்னை திமுகவில் கோலோச்சுபவர் அமைச்சர் மா.சுப்பிரமணியன். இவரது ஆளுமையைக் கொஞ்சம் குறைத்து வைக்கத்தான் டெபுடி மேயராக சைதை மகேஷ்குமாரை கொண்டு வந்தார் ஸ்டாலின். அதேபோல, தற்போது சேகர்பாபுவுக்கு எதிராக கிரிராஜனுக்கு வாய்ப்புத் தரப்பட்டுள்ளது. மொத்தத்தில், சென்னையின் பவர்ஃபுல் அமைச்சர்கள் இருவருக்கும் செக் வைத்திருக்கிறார் ஸ்டாலின் " என்கிறது அறிவாலய வட்டாரங்கள்.
சேகர்பாபு
அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த அமைச்சரானவர்களில் முக்கியமானவர் சேகர்பாபு. வடசென்னையில் செல்வாக்கு உள்ள தலைவர்களில் ஒருவராக இருக்கும் சேகர்பாபுவுக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உள்ளது. திமுக அரசு அமைந்த போது, சேகர்பாபு அறநிலையத்துறை அமைச்சரானார். அதிமுகவில் இருந்து வந்தவருக்கு அமைச்சர் பதவியா என்று அப்போதே சில முணுமுணுப்புகள் எழுந்தன. ஆனால், அதையும் தாண்டி அவரது செயல்பாடுகள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.
செக் வைத்த ஸ்டாலின்
இருப்பினும், சமீப காலமாக அவரது செயல்பாடுகள் சர்ச்சையில் சிக்கி வருகிறது. ஆவடி அருகே ரூ.20 கோடி மதிப்பில் கால்நடைகளைப் பராமரிக்க நவீன வசதிகளுடன் கூடிய பசு மடம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதேபோல தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு முதலில் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இவை திமுக அரசின் மீது விமர்சனங்கள் எழக் காரணமாக இருந்தது. தற்போது உள்ள திமுக இந்துத்துவா அரசா என்றும் கூட சிலர் கேள்வி எழுப்பினர். இந்தச் சூழலில் தான், இரா.கிரிராஜனை ராஜ்ய சபா வேட்பாளர்களாக அறிவித்து அமைச்சர் சேகர்பாபுவுக்கு செக் வைத்துள்ளார் மு.க.ஸ்டாலின்!