“One to One பேசுவோம்..” விரைவில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் வெற்றிக்கான வியூக வகுப்பில் திமுக தீவிரமாக இருக்கிறது. இந்நிலையில் ஜூன் முதல் வாரம் முதல் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை சந்திக்க இருப்பதாக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
தேர்தலுக்கு இன்னும் குறைந்த காலம்தான் இருக்கிறது. கடந்த முறைபோல் அல்லாமல் இந்த முறை, தவெக-வை மூலம் களத்தில் நிற்கிறார் விஜய். இப்போது வரை எந்த பக்கமும் சாயவில்லை என்றாலும், மதில் மேல் நடக்கும் பூனையை போல அவரது நடவடிக்கைகள் இருக்கிறது. எனவே, தேர்தலுக்கு முழு பலத்தில் தயாராக வேண்டும் என்று கட்சி தலைமை நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், நிர்வாகிகள் ஒத்துழைப்புதான் போதுமான அளவுக்கு இல்லை என அறிவாலய செய்தி வட்டாரங்கள் கூறுகின்றன.

சமீபத்தில் தேர்தலுக்கான மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 2021லும் 5 மண்டலங்களுக்கு இப்படி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் இந்த முறை 8 மண்டலங்களாக கட்சி விரிவடைந்திருக்கிறது. எனவே அனைத்திற்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அப்புறம் என்ன? தேர்தல் வேலைகளை 'ஜரூராக' தொடங்க வேண்டியதுதானே? என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நேரத்தில்தான் பஞ்சாயத்துகள் ஒன்றின் பின் ஒன்றாக வெடித்து கிளம்ப தொடங்கியது.
கே.என். நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். கனிமொழி கருணாநிதி, ஆ.ராசா, தங்கம் தென்னரசு, சக்கரபாணி மற்றும் செந்தில் பாலாஜி என 8 பேரை பொறுப்பாளர்களாக கட்சித் தலைமை நியமித்திருந்தது. ஆனால் பல சீனியர்களின் பெயர் இந்த லிஸ்ட்டில் இல்லாததால் புகைச்சல்கள் கிளம்பியுள்ள. கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், பெரியசாமி என பலரது ஆதரவாளர்களும் இந்த நியமனத்திற்கு எதிராக சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.
வடமாவட்டங்களில் பெரியதாக பஞ்சாயத்து இல்லை என்றாலும் கூட, தென் மாவட்டங்களில் சவுண்டு கொஞ்சம் ஓவராகவே இருக்கிறது.
மறுபுறம் சொந்த கட்சியின் நிர்வாகிகளுக்கு போதுமான கவனிப்பு இல்லையென்றும் ஆதகங்கள் எழுந்திருக்கின்றன. "கட்சியில் அடிமட்ட தொண்டனாக அனைத்து பணிகளையும் இழுத்தப்போட்டுக்கொண்டு செய்கிறோம். ஆனால் உதவி என்று போனால் மூன்றாம் தரப்பினர் மாதிரி எங்களை அழைக்கழிக்கின்றனர். இப்படி இருந்தால் எப்படி?
போலீஸ் ஸ்டேசனில் கூட செல்வாக்கு இல்லை. பணம் இருப்பவர்கள் பதவியை பெற்றுக்கொள்கிறார்கள். எங்களுக்கு என்ன? இப்படியே எங்கள் காலம் கழிந்துவிடுமா? அப்படி மட்டும் நடந்தால் அடுத்த தலைமுறைக்கு பெயர் சொல்ல திமுகவில் ஆள் இருக்க மாட்டார்கள்" என உடன்பிறப்புகள் கொந்தளிக்கின்றனர்.
தேர்தல் நேரத்தில் இவர்களின் ஒத்துழைப்பு அவசியம். அதற்காக அத்துமீறல்களையும் பொறுத்துக்கொள்ள முடியாது. பட்டும், படாமலும் அவர்களை அணுக வேண்டும். இந்த 'நேக்கு' மா.செக்கள் எல்லோருக்கும் தெரிவதில்லை. எனவேதான் அதிருப்தி ஓவராக இருக்கிறது என நிர்வாகிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. எனவே இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அது தற்போது சாத்தியமில்லை. ஆனால் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்டாலே அதிருப்தி காணாமல் போய்விடும். இந்த யுக்தியைதான் முதலமைச்சர் தற்போது கையில் எடுத்திருக்கிறார்.
அதேபோல மா.செக்களுக்கும் மேயர்களுக்கும் இடையேயான மோதல், மேயர்களுக்கும் கவுன்சிலர்களுக்குமான உரசல்களும் கட்சி பணிகளை வெகுவாக பாதித்தித்திருக்கிறது. நெல்லை, மயிலாடுதுறை, காஞ்சிபுரம் தொடங்கி நேற்று நடந்த மதுரை மேயர் பஞ்சாயத்து வரை கட்சியின் வளர்ச்சி வேகத்தை குறைத்திருக்கிறது. ஆகவே இந்த பஞ்சாயத்துகளை பைசல் செய்ய முதலமைச்சரே நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார்.
இந்த மாதம் முதல் வராத்தில் நிர்வாகிகளை நேரடியாக (One to One) சந்திக்கப்போவதாகவும் அவர் கூறியிருக்கிறார். இந்த சந்திப்பில், பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வு எட்டப்படுகிறதோ இல்லையோ, ஆனால் நிச்சயம் அதிருப்தி குறையும், தேர்தல் பணிகள் வேகமெடுக்கும் என்று கட்சித் தலைமை நம்பிக்கொண்டிருக்கிறது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications