திமுக கார்ப்பரேட் கம்பெனி... பாஜகவும் அதிமுகவும்தான் மக்களுக்கு சேவை செய்யும் கட்சி
திமுக வெறும் கார்ப்பரேட் கம்பெனி அதிமுகவும் பாஜகவும்தான் மக்களுக்கு சேவை செய்யும் கட்சி என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
சென்னை: திமுகவில் சாதாரண மக்கள் யாரும் பதவிக்கு வந்து விட முடியாது அது கட்சியல்ல கார்ப்பரேட் கம்பெனி என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். அதிமுகவும் பாஜகவும் மக்களுக்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்ட கட்சி என்று என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் இறுதிக்கட்ட பிரசாரம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. பிரதமர் மோடி மதுரையில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

முன்னதாக பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பிரதமர் மோடியை ஜல்லிக்கட்டு ஹீரோ என்று புகழ்ந்தார். தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, உலகமே வியக்கும் வகையில் ஒரே ஆண்டில் கொரோனா தடுப்பூசியை கொண்டு வந்தவர் பிரதமர் மோடி என புகழாரம் சூட்டினார்.
நாட்டின் மக்கள் மீது அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி என குறிப்பிட்ட எடப்பாடி பழனிச்சாமி உலகம் வியக்கும் உன்னத தலைவர் மோடி என்றார். மத்திய அரசு அளிக்கும் நிதி மூலமே தமிழகத்தில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
திமுகவில் பணக்காரர்களுக்கு மட்டுமே பதவி தரப்படுகிறது. அது கார்ப்பரேட் கம்பெனி என்று குறிப்பிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவும் பாஜகவும்தான் மக்களுக்கு சேவை செய்ய தொடங்கப்பட்ட கட்சி என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications