திமுக தேர்தல் அறிக்கை: 'ஒரே' வரியில் ஜக்கியின் 'குமுறலுக்கு' பதில் - ஸ்டாலினின் 'பக்கா' பிளான்
சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில், இந்து ஆலயங்கள் புனரமைப்பு, குடமுழுக்கு பணிக்கு 1000 கோடி ஒதுக்கப்படும் என்றும், தேவாலயங்கள் மறு சீரமைப்புக்கு 200 கோடி என்றும் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக கூட்டணியில் ம.தி.மு.க, வி.சி.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.ம.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, கொ.ம.தே.க உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க 173 தொகுதிகளில் களம் காண்கிறது. கூட்டணிக் கட்சிகள் சில உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால், மொத்தம் 188 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. இதனிடையே நேற்று 173 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பட்டியலை மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.
1000 கோடி
இந்நிலையில், இன்று வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையில், இந்து ஆலயங்கள் புனரமைப்பு, குடமுழுக்கு பணிக்கு 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மசூதி, தேவாலயங்களை சீரமைக்க ரூ.200 கோடி ஒதுக்கப்படும் என்றும், கிராமப்புற பூசாரி ஊதியம் உயர்த்தப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பல்
சமீபத்தில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், "11,999 கோவில்கள் ஒரு கால பூஜைகூட நிகழாமல் அழிந்து வருகின்றன. 34,000 கோவில்கள் 10,000க்கும் குறைவான வருட வருவாயுடன் போராடுகின்றன. 37,000 கோவில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பிற்கு ஒருவர் மட்டுமே உள்ளார். கோவில்களைப் பக்தர்களிடம் விடுங்கள். தமிழகக் கோவில்களை விடுவிக்கும் நேரமிது'' என்று தெரிவித்திருந்தார்.
கருத்தை ஏற்கிறேன்
இந்த கருத்தை தான் முழுமையாக ஏற்பதாகப் பதிவிட்டு, ஜக்கி வாசுதேவுக்கு நடிகர் சந்தானம் ஆதரவு தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர், "பூஜை நடைபெறாமல், முறையாக பராமரிக்கப்படாமல் பல கோவில்கள் இருப்பது வருத்தமளிக்கிறது. ஜக்கி வாசுதேவ் கருத்தை முழுமையாக ஏற்கிறேன். கோவில்களைப் பக்தர்களிடம் விட்டுவிடுங்கள்" என்று கூறியிருந்தார்.
அச்சாரம்
இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில், இந்து ஆலயங்கள் புனரமைப்பு, குடமுழுக்கு பணிக்கு 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கோயில்களை மீண்டும் அரசே சீரமைக்கும் என்று அறிவித்து பெரும்பாலான இந்து மக்கள் வாக்குகளுக்கு தெளிவாக அச்சாரம் போட்டிருக்கிறது திமுக.