10% இட ஒதுக்கீடு..அரசியல் சாசன கட்டமைப்பை தகர்க்கிறது.. சுப்ரீம் கோர்ட்டில் திமுக சீராய்வு மனு
சென்னை: உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து, உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினையடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், சமூக நீதி கொள்கைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. மிக மிக அடிப்படையிலான கொள்கையை நிலைநாட்டவே இந்த அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டால் தகுதி போனது, திறமை போனது என சொல்லி வந்த சிலர் இந்த இடஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள். சாதியின் பெயரால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேறுவதற்கு பயன்படும் தத்துவம்தான் சமூக நீதி கொள்கை என்றார்.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு.. உச்சநீதிமன்றம் அனுமதி
தீர்மானம் நிறைவேற்றம்
அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் இறுதியில்,முன்னேறிய சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் 103-ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் எனப்படுவது - இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்லும் சமூகநீதித் தத்துவத்துக்கு முரணானது என்பதாலும், உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளுக்கு எதிராக இருப்பதாலும், ஏழைகளில் சாதிப் பிரிவினையைக் கற்பித்துப் பாகுபாடு காட்டுவதாக இருப்பதாலும், நாங்கள் அதனை நிராகரிக்கிறோம்.
அரசியல் சாசன அமர்வு
இதுகுறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்போது, தமிழ்நாடு அரசும் உரிய முறையில் சமூகநீதியினையும், சமத்துவத்தையும் நிலைநாட்டிடும் வகையில் தனது கருத்துகளை வலுவாகப் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
அனுமதிக்க மாட்டோம்
ஏழை, எளிய, நலிந்த மக்களுக்கு அவர்களது வறுமையைப் போக்கும், பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் அனைத்தையும் ஆதரிக்கும் நாங்கள், சமூகநீதித் தத்துவத்தின் உண்மை விழுமியங்களைச் சிதைக்க அனுமதிக்க மாட்டோம். சமூகநீதித் தத்துவத்தைக் காக்கத் தமிழ்நாட்டிலிருந்து முன்னெடுக்கப்படும் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை, நாம் அனைவரும் ஒன்றிணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க உதவிகரமாக இருக்கும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மறுசீராய்வு மனு
இந்த நிலையில் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், 10% இட ஒதுக்கீடு என்பது ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் எதிரானது என்ற கடுமையான வாதத்தை முன் வைத்துள்ளது. இந்த வழக்கை திறந்தவெளி வழக்கு விசாரணையாக நடத்த வேண்டும். பொதுவாக சீராய்வு மனுக்கள் நீதிபதியின் அறையில் வைத்து நடைபெறும். ஆனால் அப்படி நடக்கக்கூடாது என்ற முக்கியமான கோரிக்கையையும் திமுக முன்வைத்துள்ளது.
அரசியல் சாசன விதிகள்
இந்த சட்டத்தினால் 133 கோடி இந்திய குடிமக்களும் பாதிக்கப்படுகின்றனர். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவினரிடையே பாகுபாட்டை உருவாக்கக்கூடியதாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளது. அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை விதிகளுக்கும், நெறிமுறைகளுக்கும் எதிராக இந்த இட ஒதுக்கீடு இருக்கிறது.
இட ஒதுக்கீடு
முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கியது என்பது, சமத்துவம் என்ற அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை தகர்க்கிறது என திமுக மனுவில் குறிப்பிட்டுள்ளது. ஏற்கெனவே இந்த வழக்கு ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வில் தீர்ப்பு வெளியான நிலையில், மூன்று நீதிபதிகள் சரியானது என்றும், இரு நீதிபதிகள் சரி இல்லை என்றும் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.