“அதிமுக கொண்டுவந்த சட்டமா இருந்தாலும் ஏன் உறுதியா இருக்கேன் தெரியுமா?” - ஸ்டாலின் உருக்கமான பேச்சு!
சென்னை: உழவர்களிடமிருந்து கருத்துகளைப் பெற்று வேளாண்மைக்கு என தனி பட்ஜெட்டை தாக்கச் செய்த அரசு தி.மு.க அரசு என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்றார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயத்தை பாதிக்கும் எந்த ஒரு ஆலைக்கும் தி.மு.க அரசு அனுமதி வழங்காது என உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி காலம் வேற.. ஸ்டாலின் மீது கடும் கோபத்தில் அரசு ஊழியர்கள் - வாக்கு வங்கி என்னவாகும்?
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி டெல்டா என்பது இப்போது மட்டுமல்ல; நம் முன்னோர்கள் காலத்திலிருந்தே வரலாற்றுச் சிறப்பு மிகுந்த ஒரு பகுதியாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
இந்தப் பகுதியைச் சார்ந்த உழவர் பெருமக்கள் மட்டுமல்லாமல், வேளாண் தொழிலாளர்களும் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வேளாண் தொழிலைத்தான் பெரிதும் சார்ந்திருக்கிறார்கள்.
சட்டப் போராட்டம்
இப்பகுதிகளில், வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள் பெரும் இடர்பாடுகளை மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்துகின்றன. கர்நாடகா மாநிலத்திலிருந்து நமக்கு வரவேண்டிய காவேரி நதிநீரைப் பெறுவதற்கு அரசியல்ரீதியாகவும், சட்டரீதியாகவும் நீண்டகாலமாக நாம் தொடர்ந்து போராடி வருகிறோம்.
வேளாண் தொழிலாளர்களின் நலனுக்காக இந்த அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. காவேரி டெல்டா பகுதியில் விளைநிலங்களைப் பாதுகாக்கவும், வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களை மேம்படுத்தவும், தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பும் முதலமைச்சரைத் தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதிமுக கொண்டுவந்த சட்டம்
சட்டத்தினை மட்டும் இயற்றிவிட்டு, அதனைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவர எந்தவொரு முன்னெடுப்பையும் முந்தைய அரசு எடுக்கவில்லை. முந்தைய ஆட்சி கொண்டு வந்த சட்டமாக இருந்தாலும், அது வேளாண் பெருமக்களுடைய நலனைப் பாதுகாப்பதற்கான வாய்ப்புகளை அளிக்கக்கூடிய சட்டமாக இருக்கிற காரணத்தால், அந்தச் சட்டத்தின் கூறுகளையெல்லாம் செயல்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என்பதில் நம்முடைய அரசு உறுதியாக இருக்கிறது.
வேளாண்மைக்கு நம்முடைய அரசு எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகத்தான் இந்தக் கூட்டம் அமைந்திருக்கிறது. உழவர்களிடமிருந்து கருத்துகளைப் பெற்று வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அரசுதான் தி.மு.க அரசு.
அனுமதிக்கவே மாட்டோம்
காவிரி டெல்டா பகுதிகளில் வேளாண் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எந்தவித தொழிற்சாலைகளையும் இந்த அரசு அனுமதிக்காது என்பதையும் இந்தக் கூட்டத்தின் வாயிலாக நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். வேளாண்மைத் தொழிலை நம்பியிருக்கக்கூடிய உழவர்கள் மற்றும் வேளாண் தொழிலின் நலனைப் பாதுகாக்கவும், வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் மூலம் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்த அரசு முனைப்போடு செயல்படும்.
பாசன நீரைப் பொறுத்தமட்டில், கர்நாடகாவிலிருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய நீரைப் பெறுவதற்கு இந்த அரசு சட்டரீதியான, அரசியல் ரீதியான எல்லா ஏற்பாடுகளையும் தொய்வில்லாமல் தொடர்ந்து மேற்கொள்ளும். வளமான தமிழகம் அமைக்க வேளாண்மையைக் காக்க வேண்டும்." எனப் பேசியுள்ளார்.