செருப்படி.. தமிழ்நாட்டில் ‘மதவெறி’ பாஜகவின் பாச்சா பலிக்காது - ஐகோர்ட் தீர்ப்பை கொண்டாடிய அமைச்சர்
சென்னை: எந்த மதத்தினரும் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் கோவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அளித்துள்ள தீர்ப்பு, போலி ஆன்மிகம் பேசும் பாஜக மத வெறியர்களுக்கு செருப்படி என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
கடந்த மாதம் செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி, "இந்து கோயில்களில் உள்ள தேரின் வடம் பிடித்து இழுக்க அனைவருக்கும் உரிமை உண்டு.
ஆனால் இந்து மதத்தை நம்பாதவர்கள், மாற்று மதத்தினர் இந்து கோயில்களின் விழாக்களில் தலைமையேற்பதை ஏற்க முடியாது என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
இந்துக்கள் 'நாகூர்’ தர்கா, 'வேளாங்கண்ணி’ சர்ச் செல்வதில்லையா? - கேஸ் போட்டவருக்கு டோஸ் விட்ட ஐகோர்ட்
மனோ தங்கராஜ் பதில்
இதற்கு பதிலளித்த அமைச்சர் மனோ தங்கராஜ் "யாருக்கு மத நம்பிக்கை இருக்கிறது, யாருக்கு இல்லை என்று சான்றளிக்க எம்.ஆர். காந்தி யார்? எதன் அடிப்படையில் அவர் சான்றளிக்கிறார்? பொதுமக்களே கோவிலுக்கு அழைக்கும் சூழலில் இந்து அறநிலையத் துறையும் அரசாங்கமும் ஒன்று தான் என்று கூட தெரியாத பாஜகவை சார்ந்த எம்.ஆர்.காந்திக்கு அமைச்சர் கோவிலுக்குள் வர கூடாது என்று சொல்ல யார் அதிகாரம் கொடுத்தது?" என்று கேள்வி எழுப்பினார்.
கோயில் கும்பாபிஷேகம்
இதற்கிடையே வரும் ஜூலை 6 ஆம் தேதி திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள அமைச்சர் மனோ தங்கராஜுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை எதிர்த்து குமரி மாவட்டம் பிரம்மபுரத்தை சேர்ந்த சோமன் என்பவர் இந்துக்கள் அல்லாதவர்களை கோயிலுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் எனக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
உயர்நீதிமன்றத்தில் விசாரணை
வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வு, "இந்து அறநிலையத்துறையின் விதிகளில் கோயில் கும்பாபிஷேகங்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் கலந்துகொள்ளக்கூடாது என்று கூறப்படவில்லை. 120 கோடி பேர் உள்ள இந்தியாவில் இறை நம்பிக்கை கொண்டவர்கள் கோயிலுக்கும் செல்கையில் அவர்களின் மதத்தை உறுதி செய்வது பிரச்சனையை ஏற்படும்.
அதிரடி உத்தரவு
கிறிஸ்தவரான யேசுதாஸ் பல இந்து கடவுள் பாடல்களை பாடியுள்ளார். அவரது பாடல்கள் கோயில்களில் ஒலிக்கின்றனவே. வேளாங்கண்ணி தேவாலயத்துக்கும் நாகூர் தர்காவுக்கும் இந்துக்கள் சென்று வழிபடுகின்றார்கள். எனவே இதனை குறுகிய பார்வையில் அணுகாமல் பரந்த மனதோடு அணுக வேண்டும். எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்." என்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதவெறி பாஜக
இந்த தீர்ப்பை வரவேற்று பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், "எந்த மதத்தினரும் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் கோவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம் என்ற மதுரை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு போலி ஆன்மிகம் பேசும் பாஜக மத வெறியர்களுக்கு செருப்படி! மதுரை நீதிமன்றத்தின் கருத்து தான் பொதுமக்கள் அனைவருடைய கருத்து. பாஜகவின் மத வெறி அரசியல் தமிழகத்தில் என்றும் எடுபடாது." என்று கூறியுள்ளார்.