உதயநிதிக்கு எதிரான தேர்தல் வழக்கு.. அதிரடியாய் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்.. ஆனாலும் ஒரு சிக்கல்?
சென்னை : திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தொடரப்பட்ட தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் கசாலியை விட 69 ஆயிரத்து 355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்.எல்.ரவி தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

உதயநிதிக்கு எதிராக வழக்கு
தன் மீதான குற்ற வழக்கு விவரங்களை முழுமைமையாக தெரிவிக்கவில்லை என்றும், அந்த வேட்புமனுவை ஏற்றது தவறு என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு பல முறை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் தரப்பில் வாதங்களை தொடங்காமல் கால அவகாசம் கேட்கப்பட்டது.

நீதிபதி எச்சரிக்கை
உரிய நேரத்தில் வாதங்களை தொடங்காவிட்டால், மனுவின் தன்மைக்கு ஏற்ப உத்தரவு பிறப்பக்கப்படும் என நீதிபதி எச்சரித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் வழக்கை வாபஸ் பெறுவதாகவும், நீதிமன்றம் அனுமதிக்க வேண்டுமெனவும் மனுதாரர் ரவி தரப்பில் தெரிவிக்கபட்டது.

உதயநிதி தரப்பு வாதம்
உதயநிதி தரப்பில் மனுத்தாக்கல் செய்தபோது செலுத்த வேண்டிய வைப்பு தொகையை செலுத்தாததன் அடிப்படையில் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், வாபஸ் பெற அனுமதிக்க கூடாது எனவும் வாதிடப்பட்டது.

வழக்கு தள்ளுபடி
இதையடுத்து நீதிபதி, வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து இருந்தார். இன்று இந்த வழக்குகளில் தீர்ப்பளித்த நீதிபதி பாரதிதாசன், வைப்புத்தொகை செலுத்தாமல் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெற அனுமதி மறுத்ததுடன், தேர்தலை எதிர்த்த இரு வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். பிரேமலதா என்ற வாக்காளர் தொடர்ந்த வழக்கு மட்டும் நிலுவையில் உள்ளது.












Click it and Unblock the Notifications