குஜராத்தியர்களை தவிர வேறு யாரும் தொழில் செய்ய முடியாத நிலை! தயாநிதி மாறன் பகீர் குற்றச்சாட்டு!
சென்னை: இந்தியாவில் குஜராத்தியர்களை தவிர வேறு யாரும் தொழில் செய்ய முடியாத நிலை உருவாகியிருப்பதாக திமுக எம்.பி.தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
தமிழகத்தில் நடப்பது ஆன்மிக ஆட்சி என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருக்கிறார்.

சாதனை விளக்கம்
திமுக அரசு ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் வடசென்னைக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டையில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய தமிழக இந்து அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு, பதவியேற்றதிலிருந்து என்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்கள் என எதிர்கட்சிகள் கேட்பதாகவும், 363 வாக்குறுதிகள் முதல் ஓராண்டிலேயே நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் சேகர்பாபு
ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டிருக்க கூடிய கவர்னரால் தமிழகத்தில் ஒன்றிய அரசு இந்தியை திணித்து வருவதாக குற்றஞ்சாட்டினார். காகம் தலைக்குமேல் எச்சம் இடுவதையே எதிர்க்கிறோமே தவிர காகத்தை எதிர்க்கவில்லை என இந்தியை காகத்தோடும் இந்தி திணிப்பை காகத்தின் எச்சத்தோடும் ஒப்பிட்டு பேசினார்.

ஆன்மிக ஆட்சி
நாங்கள் நிறைவேற்றும் தீர்மானத்தை கவர்னர் ஏற்காத போது நாங்கள் ஏன் கவர்னரை ஏற்க வேண்டும் என கேள்வி எழுப்பினார். தருமபுரம்
ஆதினத்தை கையில் எடுத்து திமுக ஆட்சியை இந்து விரோத ஆட்சியாக காட்ட முற்பட்ட எதிர்கட்சிகளுக்கு பதிலளிக்கும் வகையில் தருமபுரம் ஆதினமே இது ஆன்மீக ஆட்சி என்று கூறிவிட்டதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

தயாநிதி மாறன்
முன்னதாக பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், கொரானாவிலும் மழையிலும் உங்கள் வீட்டு வாசலில் வந்து நின்ற முதல்வர் முக ஸ்டாலின் என பெருமிதம் தெரிவித்தார்.காலில் விழுந்தவர்கள் இருந்த இடத்தில் கம்பீரமாக வந்து ஆட்சி நடத்திக் கொண்டிருப்பவர் முதல்வர் ஸ்டாலின் என்றும் பதவியேற்றவுடன் உடனடியாக விவசாயகடனையும், நகைக்கடன் 1000 கோடியையும் தள்ளுபடி செய்தவர் முதல்வர் ஸ்டாலின் எனவும் புகழாரம் சூடினார்.

பெண்கள் முன்னேற்றம்
மற்ற மாநிலத்தில் வேலை செய்த ரேடார் கருவி தமிழகத்தில் செயல்படாமல் இருந்ததால் அதற்கும் நிதி ஒதுக்கியவர் ஸ்டாலின் என்றும் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு 200 கோடி ஒதுக்கியவர் நம் முதல்வர் என்றும் பாராட்டினார்.
பெண்கள் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என உணர்ந்து கல்வியில் முன்னேற்றம் காண செய்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்றும் பெட்ரோல் டீசல் விலையை பற்றி கவலைப்படாமல் விதவிதமான ஆடைகளை அணிந்து குஜராத்தியர்களைதவிர வேறு யாரும் தொழில் செய்ய முடியாது என்பதை போல் மோடி செயல்பட்டு வருகிறார் என தயாநிதிமாறன் சாடினார்.

இந்தியாவை தெரியும்
இந்தியை தமிழகத்தில் திணிப்பதற்கு முக்கிய காரணமே சேகர்பாபு தான் எனவும் (தயாநிதி மாறன் நகைச்சுவை) பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளான அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கனவை இந்த ஆட்சியில் அமைச்சர் சேகர்பாபு சட்டமாக்கியது மட்டுமலலாமல் தமிழக கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை என மாற்றியுள்ளார் என கூறினார்.
மேலும் தமக்கு இந்தி தெரியாது என்றும் ஆனால் இந்தியாவை பற்றி தெரியும் என்பதாலையே கருணாநிதி தன்னை மத்திய அமைச்சராக்கினார் என்றும் பேசினார்.












Click it and Unblock the Notifications