தேசிய கீதத்தில் "திராவிடம்".. மரியாதை கொடுக்காமல் ஆளுநரால் அமர்ந்திருக்க முடியுமா? டி.ஆர்.பாலு சவால்
சென்னை: தேசிய கீதத்தில் "திராவிடம்" என்ற வார்த்தை வரும் போது ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை கொடுக்காமல் அமர்ந்திருப்பாரா என்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு சவால் விடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அரசியலமைப்பு சட்டம் 361 (4)ன் படி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்புவோம் என்று டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கை, சனாதனம், திராவிடம், திருக்குறள், திருவள்ளுவர், தமிழ் மொழி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தன. இந்த நிலையில் ராஜ் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழகத்தில் துரதிர்ஷ்டவசமாக பின்னோக்கி இழுக்கும் அரசியல் நடைபெறுகிறது. இந்த தேசம் முழுக்க எதை முன்னெடுத்தாலும் அதற்கு தமிழ்நாடு மட்டும் மறுப்பு தெரிவிக்கும். இது வாடிக்கையாகிவிட்டது.
அவற்றை உடைக்க வேண்டும். உண்மை மேலோங்க வேண்டும். தமிழ்நாடு என்பது இந்தியாவின் ஆன்மா. இந்தியாவின் அடையாளம். சொல்லப்போனால் தமிழ்நாடு என்பதை விடவும் தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
அன்பழகன் நூற்றாண்டு விழா
இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் டி.ஆர்.பாலு பேசுகையில், திமுகவில் உள்ள ஒவ்வொரு நிர்வாகியும், இனிமேல் வரப்போகும் நிர்வாகியும் அன்பழகனின் வாழ்க்கையை அறிந்துகொள்ள வேண்டும்.
திமுக
கடுமையான தோல்விகளை சந்தித்தாலும், ஃபீனிக்ஸ் பறவையை போல் உயிர்பெற்ற நமது கட்சிக்கு உற்ற துணையாக இருந்தவர். அவருக்கும், கருணாநிதிக்கும் இடையில் இருந்த நட்புக்கு, அன்பழனுக்காக நடத்தப்பட்ட மணி விழா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஏனென்றால் ஒவ்வொரு நிமிடத்திற்கு அவ்வளவு மாற்றங்களை கருணாநிதி சொல்லியதோடு, எங்களையும் செய்ய வைத்ததாக தெரிவித்தார்.
ஆளுநர் குறித்து டி.ஆர்.பாலு
தொடர்ந்து, தமிழகத்திற்கு ஒரு போலீஸ்காரர் வந்திருக்கிறார். காவல்துறை அதிகாரியாக இருப்பவர்கள் ஒழுக்கமாக இருப்பார்கள். ஆனால் ஒழுக்கமில்லாமல் சனாதன அரசியல்வாதியை தமிழ்நாட்டிற்கு ஆளுநராக நியமித்திருக்கிறார்கள். தமிழக அரசுக்கு மேல் அமர்ந்து இருக்கிறார். மத்திய அரசின் ஏஜெண்ட்டாக செயல்பட்டு வருகிறார். அவர் திராவிடம் என்று எதுவும் இல்லை, சனாதனமே உண்மையானது என்று கூறுகிறார். புதிய கல்விக் கொள்கையை வேண்டும் என்று ஆளுநர் சொல்கிறார். நீட் தேர்வு தேவை என்று சொல்கிறார்.
டி.ஆர்.பாலு சவால்
ஆனால் நீட் தேர்வால் மாணவர்கள் உயிரிழப்பது அவர் கண்களுக்கு தெரிவதில்லை. நீட் சட்டமுன்வடிவை கிடப்பில் போட்டவர் ஆளுநர் ஆர்.என்.ரவி. இப்படியெல்லாம் செயல்படும் ஆளுநர் நமக்கு தேவையா? திருக்குறள், திருவள்ளுவருக்கு வேற்றுமை கிடையாது. அவருக்கு பட்டை, பூணூல் போடுவது சரியா? திருவள்ளுவர் தமிழருக்கு அனைத்து மதங்களுக்கும் சொந்தமானவர். திராவிடம் பற்றி எதுவும் தெரியாமல் தவறாக பேசி வருகிறார் ஆளுநர். இவ்வளவு பேசுகிறாரே, தேசிய கீதத்தில் திராவிடம் என்ற வார்த்தை வரும் போது, அவரால் அமர்ந்திருக்க முடியுமா? என்று சவால் விடுத்தார்.
நாடாளுமன்றத் தேர்தல்
தொடர்ந்து, ஆளுநருக்கு என்று பொறுப்பு இருக்கிறது. ஆளுநர் என்பவர் அரசியலமைப்பு சட்டப்படியே செயல்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வேண்டும் என்று எவ்வளவு குரல் கொடுத்துவிட்டோம். அதன் பின்னரும், தமிழக அரசை தொந்தரவு செய்வதற்காகவே மத்திய அரசு ஆளுநரை நியமித்திருக்கிறது. இன்னும் ஒன்றரை ஆண்டு தான்.
ஆளுநருக்கு நோட்டீஸ்
2024ம் ஆண்டுக்கு பின் மத்தியில் பாஜக ஆட்சி தொடரப் போவதில்லை. காங்கிரஸ் கட்சி நண்பர்கள், சிறிது அனுசரித்து சென்றால் போதும். விரைவில் காங்கிரஸ் கட்சி விஸ்வரூபம் எடுக்கும். 2024ம் மிகப்பெரிய வெற்றியை நாம் அனைவரும் பெறப் போகிறோம். அதேபோல் அரசியலமைப்பு சட்டம் 361 (4)ன் படி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்புவோம். அதன்பின்னர் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று தெரிவித்தார்.