FCRA சட்டத்திருத்த மசோதவை திரும்ப பெறனும்.. ஜூன் 28-ல் நாடு முழுக்க உண்ணாவிரத போராட்டம்.. திமுக எம்பி வில்சன்
சென்னை: மத்திய அரசின் வெளிநாட்டு நிதி உதவி சட்டத்திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, வரும் ஜூன் 28 ஆம் தேதி நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் அறிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற இணையவழி கருத்தரங்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மத்திய அரசின் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டமான Foreign Contribution Regulation Act (FCRA) திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. தமிழக முதல்வர் ஸ்டாலினும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை (NGO) குறிவைத்து இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இதைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, இந்த மசோதா ஏப்ரல் 2026 தொடக்கத்தில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இம்மசோதாவை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டு நிதியுதவி (FCRA ) திருத்தச்சட்டம் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தலைமையில் நேற்று இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், 150க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சிறுபான்மை சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அப்போது இந்தச் சட்டத்திருத்தத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்தக் கருத்தரங்கில் பேசிய வில்சன், "இந்த மசோதா ஜனநாயகத்தின் அடிப்படைகளையே அச்சுறுத்துகிறது. மேலும், இது தன்னார்வ அமைப்புகளின் சுதந்திரமான செயல்பாட்டை கடுமையாகப் பாதிக்கும். இதனால் ஏழை, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்குக் கிடைக்கும் கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படக்கூடும்," என்று தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக கருத்தரங்கில், எஃப்.சி.ஆர்.ஏ மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி வரும் ஜூன் மாதம் 28 ஆம் தேதி நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications