இலங்கை மக்களுக்கு திமுக எம்.பிக்கள் ஒரு மாத ஊதியம்- மதிமுக சார்பில் ரூ13.15 லட்சம் நிதி உதவி
சென்னை: பொருளாதார நெருக்கடியில் சிக்கி தத்தளிக்கும் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் திமுக எம்.பி.க்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை நிதி உதவியாக வழங்குவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இலங்கை மக்களுக்கு மதிமுக சார்பில் ரூ13.15 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கையில், இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து உணவு, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பிவைக்கப்படும் என்று அறிவித்து இருந்தேன்.
உதவுவதில் நாங்களும் திமுகவும் ஒன்று! இலங்கை மக்களுக்கு ரூ.10 லட்சம் நிதி! காங்கிரஸ் அறிவிப்பு!
நிதி உதவி வேண்டுகோள்
இதற்காக மத்திய அரசின் அனுமதியும் தற்போது கிடைத்துள்ளது. இதன் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பிவைக்கப்பட உள்ளன.இந்த சூழ்நிலையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம் இது. எனவே, மனிதாபிமான அடிப்படையில் இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
திமுக எம்.பிக்கள் ஒரு மாத ஊதியம்
இதனையடுத்து திமுக சார்பில் ரூ1 கோடி நிதி உதவி வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திமுக பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் வழங்கினார். மேலும் திமுக எம்.எல்.ஏக்க்கள் ஒரு மாத ஊதியமும் வழங்கினர். ஏற்கனவே விசிக எம்.எல்.ஏக்கள் ஒரு மாத ஊதியத்தை நிதி உதவியாக வழங்க உள்ளதாக அறிவித்தனர். இந்த நிலையில் திமுகவின் எம்.பிக்களும் தங்களது ஒரு மாத ஊதியத்தை இலங்கை மக்களுக்கு நிதி உதவியாக வழங்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
மதிமுக நிதி உதவி
அதேபோல் இலங்கை மக்களுக்கு ம.தி.மு.க. சார்பில் ரூ 13.15 இலட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி உணவு மட்டும் அடிப்படைத் தேவைப் பொருட்கள் கிடைக்காமல் பரிதவிக்கின்ற இலங்கை மக்களுக்கு, தமிழக அரசு சார்பில் மனிதாபிமான அடிப்படையில் நிதி மற்றும் பொருள் உதவி அளிப்பது என முதல்வர் அறிவித்து இருந்தார். தாராளமாக உதவும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கின்றார். அவரது வேண்டுகோளை ஏற்று, மறுமலர்ச்சி திராவிட
முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ரூபாய் 13 லட்சத்து 15 ஆயிரம் வழங்கப்பட்டது.
முதல்வருடன் சந்திப்பு
அதற்காக, இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் புனித ஜார்ஜ் கோட்டையில் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை, மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ, நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, சட்டமன்ற உறுப்பினர்கள் சதன் திருமலைக்குமார், அரியலூர் சின்னப்பா, மதுரை பூமிநாதன், தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ ஆகியோர் சந்தித்தனர்.அப்போது அமைச்சர் துரைமுருகன், தமிழக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் உடன் இருந்தனர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ரூபாய் 5 லட்சம்; மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ, நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி தங்களது ஒரு மாத ஊதியம் தலா 2 இலட்சம்; 3 சட்டமன்ற உறுப்பினர்கள் தலா ரூபாய் 1,05,000; ஒருவர் ரூபாய் ஒரு லட்சம் என மொத்தமாக ரூபாய் 13 லட்சத்து 15 ஆயிரம், காசோலை மற்றும் வரைவோலையாக வழங்கப்பட்டது. இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.