அதிமுக ஏதாவது செய்யட்டும்.. அதுவரைக்கும் வெயிட் பண்ணுவோம்.. இதுதான் திமுக கணக்காம்!
Recommended Video

சென்னை: கூட்டணி குறித்து அதிமுக தரப்பில் இறுதியாக அறிவிக்கும் வரை தாங்கள் அமைதி காக்க திமுக தரப்பு முடிவு செய்துள்ளதாம்.
திமுகவோடு தோழமையில் இருக்கும் கட்சிகள் கூட்டணிக்கு தங்களை அழைப்பார்கள் என்று பொது வெளியில் பேசி வருகின்றனர். திருமாவளவன் இதை ஊடகங்களிடமும் கூறி வந்தார்.
கூட்டணி பற்றி பேச திமுகவில் குழு அமைக்கப்பட்டும் இதுவரை வெளிப்படையாக எந்தவித பேச்சு வார்த்தையும் நடந்ததாக தெரியவில்லை. கூட்டணியில் இருக்கும் காங்கிரசுக்கும் அந்த அணியில் எத்தனை சீட்டுகள் கிடைக்கும் என்பது வெளிப்படையாக கூறப்படவில்லை.

தீர்மானிக்கும் சக்தி
மத்திய அரசின் தமிழக விரோத போக்கு ஜெயலலிதா இல்லாத சூழலில் அதிமுக அரசு மத்திய அரசுக்கு அடங்கி நடப்பது இவையெல்லாம் தமிழக மக்களுக்கு கோபமாக மாறியுள்ள நிலையில் தேர்தல் களம் தங்களுக்கு சாதகமாக உள்ளதாக திமுக எண்ணுகிறது. ஆகவே கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்குவதை விட தாங்கள் குறைந்த பட்சம் 25 இடங்களிலாவது போட்டியிட்டு வென்று மத்திய அரசை தீர்மானிக்கும் சக்தியாக வரவேண்டும் என்பது அவர்களின் எண்ணம்.

பாமகவையும் விடாமல்
அதற்காக பல்வேறு யுக்திகளை கடைப்பிடித்து வருகிறது திமுக. அதாவது பல கட்சிகளை தங்கள் ஒன்றிணைக்க வேண்டும் ஆனால் குறைந்த தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பது அவர்களின் கணக்கு. அதற்காகவே பாமகவையும் விடாமல் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

கவனமாக இருக்கிறார்களாம்
அதோடு கடந்த தேர்தல்களில் கிடைத்த மோசமான அனுபவங்கள் இம்முறை மீண்டும் நடக்காமல் இருக்கவேண்டும் என்பதிலும் கவனமாக இருக்கிறார்களாம். அதாவது 2006 -ம் ஆண்டு மதிமுக தொடர்ந்து திமுக அணியோடு பேசி வந்தது. ஆனால் தொகுதிகளை ஒதுக்குவதில் ஏற்பட்ட இழுபறி காரணமாக கடைசி நேரத்தில் திமுக அணியில் இருந்து வெளியேறி அதிமுக அணியில் சென்று இணைந்து கொண்டது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடந்து விட கூடாது என்பதில் திமுக கவனமாக உள்ளதாம்,

கூட்டணி முடிவு செய்யப்படவில்லை
அதிமுகவும் மெகா கூட்டணியை அமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. அவர்களது அணியில் பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளோடு பாமகவிடமும் பேசி வருகின்றனர். இங்கும் கூட்டணி முடிவு செய்யப்படவில்லை. ஆகவே திமுக இதற்காகவும் காத்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது அதிமுக அணி இறுதி செய்யப்பட்டு விட்டால் அதன் பின்னர் தங்களோடு இருக்கும் கட்சிகளுக்கு தாங்கள் ஒதுக்குவதே தொகுதிகள் என்றாகிவிடும்.

அதிமுக அணி அறிவிக்கப்பட்ட பிறகே
ஆகவே திமுக அணியில் யார் உள்ளனர் எவ்வளவு தொகுதிகள் என்பது அதிமுக அணி அறிவிக்கப்பட்ட பிறகே தெரியவரும் என்பதுதான் இப்போதைய நிலைமை. மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சமீபத்தில் திமுகவுடன் இருக்கும் சில கட்சிகள் எங்களுடனும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்று கூறினார். அதன் பின்னரே திமுக இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications