கச்சத்தீவு திருவிழா: இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் முதல்வர் ஸ்டாலின் பிரதிநிதி பேச்சு?
சென்னை: கச்சத்தீவு திருவிழாவில் தமிழக பக்தர்களை பங்கேற்க அனுமதிப்பது தொடர்பாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதிநிதி பேச்சுவார்த்தை நடத்தியதாக இலங்கை தமிழ், ஆங்கில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
கச்சத்தீவு திருவிழா- இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேசியது டி.ஆர்.பாலு எம்.பி!
தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி பிரதேசமான கச்சத்தீவு தன்னிச்சையாக மத்திய அரசால் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை இருந்தும் கூட இலங்கை கடற்படையால் கச்சத்தீவு பகுதியில் 700க்கும் அதிகமான மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால் மத்திய அரசு இதனை தட்டிக்கேட்ட்டது இல்லை.
கச்சத்தீவு திருவிழா: தமிழக மீனவர்களுக்கு அனுமதி கோரி மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
கச்சத் தீவு திருவிழா
இதனால் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது தமிழகத்தின் நீண்டகால கோரிக்கை. மேலும் கச்சத்தீவில் தமிழக மீனவர்களால் கட்டப்பட்ட அந்தோணியார் தேவாலய திருவிழாவில் இருநாட்டு தமிழர்களும் பங்கேற்பது வழக்கம். ஆனால் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடந்த காலத்தில் அந்தோணியார் தேவாலய திருவிழாவில் தமிழக தமிழர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
தமிழக பக்தர்களுக்கு தடை
2009-ம் ஆண்டுக்கு பின்னர் இருநாட்டு தமிழர்களும் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்று வந்தனர். இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள கச்சத்தீவு திருவிழாவில், கொரோனா பரவலைக் காரணம் காட்டி தமிழக பக்தர்கள் பங்கேற்க இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இது தமிழக பக்தர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மீனவர்கள் மனு கொடுத்திருந்தனர்.
முதல்வர் ஸ்டாலின் கடிதம்
மேலும் கச்சத்தீவு அந்தோணியார் தேவாலயப் பெருவிழாவில் தமிழக மீனவர்களை அனுமதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பினார். அக்கடிதத்தில், பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த ஆண்டு திருவிழாவில் தமிழக மீனவ பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக மீனவர்கள் மற்றும் பக்தர்கள் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்துடன் ஆன்மீக மற்றும் உணர்வுபூர்வமான தொடர்பை பல ஆண்டுகளாகக் கொண்டுள்ளனர். கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது தமிழக மீனவர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியமாக புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திரப் பெருவிழாவில் தமிழக மீனவர்கள் தடையின்றி பங்கேற்பதை உறுதி செய்யுமாறு இலங்கை அரசை வலியுறுத்திட வேண்டும் என கோரியிருந்தார். இதனிடையே இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளார். அவர் நேற்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்தித்து பேசினார்.
இலங்கை அமைச்சருடன் ஸ்டாலின் பிரதிநிதி பேச்சு?
இந்நிலையில் இலங்கை ஊடகங்களில் இன்று ஒரு செய்தி வெளியாகி உள்ளது. இலங்கை மீன்வளத்துறை அமைச்சக செய்திக் குறிப்பை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள அச்செய்தியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிரதிநிதியாக மூத்த திமுக தலைவர் ஒருவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேசினார்; கச்சத்தீவு திருவிழாவில் தமிழக பக்தர்கள் பங்கேற்பதற்கான உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு டக்ளஸிடம் அந்த பிரமுகர் கேட்டுக் கொண்டார். இதனை ஏற்று கச்சத்தீவு திருவிழாவில் தமிழக பக்தர்கள் பங்கேற்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக தாம் உறுதியளித்ததாக டக்ளஸ் தேவானந்தா கூறினார் என்கிறது அந்த செய்தி. இருப்பினும் இந்த பேச்சுவார்த்தையின் அதிகாரப்பூர்வ விவரம் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.