பாஜகவில் இணைய திமுகவினர் விருப்பம்.....அனுசரித்தால் ஆட்சி செய்யலாம்...வி.பி. துரைசாமி ஒரே போடு
சென்னை: பாஜகவில் சேருவதற்கு திமுகவில் இருந்து அதிகமானவர்கள் விருப்பம் தெரிவித்து வருவதாக சமீபத்தில் பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி எல்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். இவர் தற்போது தமிழக பாஜகவின் துணைத்தலைவராக இருக்கிறார்.
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று இவர் நாமக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

எதிர்ப்பு இல்லை
அப்போது, ''நான் பாஜகவில் இணைந்து இருந்தாலும் நான் நானாகவே இருக்கிறேன். எனக்கு திமுகவினரிடம் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லை. என்னை அதிகமானவர்கள் வரவேற்கின்றனர். இந்த நிலையில் திமுகவில் இருந்து அதிகமானவர்கள் பாஜகவில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்து வருகின்றனர். நான் தேசிய கட்சியில் கடந்த 45 ஆண்டு காலம் இல்லாமல் இருந்ததற்கு வருத்தப்படுகிறேன்.

மோடிக்கு தேர்வு
பிரதமர் மோடிக்கு தேர்வு வைக்க வேண்டும் என சமீபத்தில் சீமான் தெரிவித்துள்ளார். அவர் ஏற்கெனவே இரண்டாவது முறை தேர்தல் என்ற தேர்வை சந்தித்து தான் 2-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார்.

சூர்யா
நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யாவின் கருத்தில் எனக்கு சம்மதம் இல்லை. ஸ்டாலின் 10 மாதங்கள் ஆனாலும் நீட் தேர்வை தடுத்து நிறுத்த முடியாது. மருத்துவப் படிப்புக்கு தகுதியான மாணவர்கள் வர வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. அதன் அடிப்படையில் நீட் தேர்வு நடந்து வருகிறது.

தவறான பிரச்சாரம்
இந்தியை மட்டும் தான் புதிய தேசிய கல்விக் கொள்கையில் படிக்கவேண்டும் என்று மத்திய அரசு ஒருபோதும் கூறவில்லை. ஒரு மொழியை கூடுதலாக கற்றுக் கொள்ள வேண்டும் என்றுதான் தெரிவித்துள்ளது. 5-ம் வகுப்பு வரை தாய்மொழி கல்வியை கட்டாயம் கற்க வேண்டும் என்று தான் கூறி வருகிறோம். நீட் தேர்வு குறித்து அரசியல்வாதிகள் தான் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும், இறப்பு விகிதத்தை குறைப்பதிலும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. கன்னியாகுமரி லோக் சபா தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் பாஜக போட்டியிடும். ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு அவர் யாருக்கு ஆதரவளிப்பார் என்று பார்க்கலாம். தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழகத்தில் பாஜகவை அனுசரித்து செல்லும் கட்சிதான் ஆட்சிக்கு வர முடியும்.

ரூ.5 லட்சம்
ஆயுஷ்மான் பாரத் என்ற பெயரில் பிரதமரின் ரூ.5 லட்சத்துக்கான இலவச சுகாதார காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைவரும் அறிவர். இதில் இணைந்து அனைவரும் பயன் பெற வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications