‘அவ்ளோ’ சிறப்பா சட்டம் ஒழுங்கை பாதுகாத்தவர்ல அவரு.. பிரஸ் மீட்டில் கிண்டல் செய்த டிகேஎஸ் இளங்கோவன்!
சென்னை : எடப்பாடி பழனிசாமி அவ்வளவு சிறப்பாக சட்டம் ஒழுங்கை பாதுகாத்தவர் அல்லவா. அவர் மிகத் திறமையான முதல்வராக இருந்த காரணத்தால் எங்கள் மீது பழி போடுகிறார் என திமுக செய்தி தொடர்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்திருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தெரிவித்ததாக ஈபிஎஸ் கூறினார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக செய்தி தொடர்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது.. அமித் ஷாவிடம் புகார் சொன்னேன்: எடப்பாடி பேட்டி
சுப்புலட்சுமி ஜெகதீசன் - விலகல்
திமுகவிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிவித்தார். அரசியலில் இருந்து ஓய்வு பெறும் விருப்பத்தின் அடிப்படையில் விலகுவதாக அவர் தனது விலகல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், அதுகுறித்துப் பேசிய திமுக செய்தி தொடர்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன், சுப்புலட்சுமி ஜெகதீசன், உடல் நலன் கருதி அரசியலில் இருந்தே ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது தனிப்பட்ட விருப்பத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் எனத் தெரிவித்தார்.
அடுத்த துணை பொதுச் செயலாளர்
மேலும் பேசிய அவர், திமுக சட்ட விதிப்படி துணை பொதுச் செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள். துணை பொதுச் செயலாளர்கள் ஒருவர் கட்டாயம் மகளிராகவும், ஒருவர் தாழ்த்தப்பட்டவராகவும் இருப்பார்கள். 25ஆம் தேதி வரை மாவட்ட கழக தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. அதை பரிசீலித்து விரைவில் தேர்தல் நடத்தப்படும். அதன்பிறகு பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றார்.
இரண்டையும் ஒப்பிட முடியாது
மேலும், கடந்த 2 ஆண்டுகளில் 2 துணைப் பொதுச் செயலாளர்கள் திமுகவில் இருந்து விலகியிருப்பது பற்றி பேசிய அவர், ஒருவர் உடல் நலன் காரணமாக இப்போது ஒருவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகச் சொல்லி இருக்கிறார். முன்பு சென்ற துணைப் பொதுச் செயலாளர் வி..பி.துரைசாமி, பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த எல்.முருகனின் ஊர்க்காரர். பாஜகவில் புதிதாக ஆட்களை சேர்க்கும்போது, ஒரே ஊர்க்காரரையும் அழைத்துச் சென்று விட்டார். அது வேறு. இது வேறு அதனையும் இதனையும் ஒப்பிட முடியாது என்றார்.
ஜெகதீசன் பதிவுகள்
மேலும், சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது விலகலுக்கு என்ன காரணம் சொன்னாரோ அதை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். அவரது விலகலுக்கு புதிதாக நாங்கள் காரணம் கற்பிக்க முடியாது. சமூக வலைதளங்களில் விமர்சித்து வரும் ஜெகதீசனுக்கு ஏற்கனவே எச்சரிக்கை கடிதம் அனுப்பி இருக்கிறோம். அவரது பதிவுகளை நீக்கச் சொல்லி அறிவுறுத்தி இருக்கிறோம். அவர் திமுகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லாதவர் என்பதால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
துணை பொதுச்செயலாளர் - எண்ணிக்கை
இப்போது துணை பொதுச்செயலாளர்களாக திமுகவில் 5 பேர் இருக்கிறார்கள். தேவைப்பட்டால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஆனால், இப்போதைக்கு அதற்கான எந்த அவசியமும் இல்லை. அப்படி எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றால் பொதுக்குழுவின் அனுமதி பெற்ற பிறகே அதனைச் செய்ய முடியும எனத் தெரிவித்தார்.
டிவியில் தான் பார்த்தாராம்
எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து முறையிட்டது பற்றி பதிலளித்த டிகேஎஸ் இளங்கோவன், "எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது, தற்போதைய முதல்வர் ஸ்டாலின், குட்கா பாக்கெட்களை காட்டி, போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகச் சொன்னார். அதற்காக எம்.எல்.ஏ பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர் அவர். தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதையே டிவியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று சொன்னவர் அவர்.
எங்கள் மீது பழி போடுகிறார்
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், அவர்களது தலைவிக்குச் சொந்தமான கோடநாடு பங்களாவிற்குள் சென்று ஒருவரைக் கொன்றுவிட்டு, அங்கிருந்த ஆவணங்களையும் எடுத்துச் சென்றார்கள். அதற்குக் கூட எடப்பாடி பழனிசாமி பதில் சொல்லவில்லை. அவ்வளவு திறமையாக, அவ்வளவு சிறப்பாக சட்டம் ஒழுங்கை பாதுகாத்தவர் அல்லவா அவர்! அவர் மிகத் திறமையான முதல்வராக இருந்த காரணத்தால் எங்கள் மீது பழி போடுகிறார்.
அண்ணாமலை - கவர்னர் ரவி
அண்ணாமலை - ஆளுநர் சந்திப்பு குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஆர்.எஸ் பாரதி, இருவரும் ஐபிஎஸ் அதிகாரிகளாக இருந்தவர்கள். அதனால் நட்பு அடிப்படையில் சந்திப்பார்களாக இருக்கும். எதையாவது ஒன்றைச் சொல்லி, அதன் மூலமாக ஏதாவது செய்தியைச் சொல்ல நினைக்கிறார்கள்.எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவையும் மோடியையும் சந்திக்க நீண்ட நாட்களாக காத்திருந்து ஏமாந்து இப்போதுதான் சந்திக்கிறார் எனத் தெரிவித்தார்.