அடடே ஆச்சரியம்! டெல்லி தி.மு.க. அலுவலக திறப்பு விழா- பா.ஜ.க. தலைவர்களுக்கும் மு.க.ஸ்டாலின் அழைப்பு?
சென்னை: டெல்லியில் நடைபெற உள்ள தி.மு.க. அலுவலகத் திறப்பு விழாவுக்கு பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க.) தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபா இரண்டிலும் மொத்தம் 7 எம்.பிக்களைப் பெற்று தலைமை தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தேசிய, மாநில கட்சிகளுக்கு டெல்லியில் அலுவலகம் கட்ட இடம் வழங்க மத்திய அரசு கடந்த 2006-ல் முடிவு செய்தது. இதனடிப்படையில் டெல்லியில் உள்ள தீன் தயால் உபாத்தியாயா மார்க் பகுதியில் தி.மு.க. கட்சி அலுவலகம் கட்ட கடந்த 2013-ஆம் ஆண்டு இடம் ஒதுக்கப்பட்டது.
இந்த இடம் அருகே தான் பா.ஜ.க. தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. டெல்லி தி.மு.க. அலுவலக கட்டுமானப்பணிகள் முடிவடைந்துள்ளன. தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டிருந்தார்.

டெல்லி கலைஞர் அறிவாலயம்
சுமார் 11,000 சதுர அடியில் 10,000 சதுர அடியில் இந்த அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 4 மாடிகளைக் கொண்ட இந்த அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அருங்காட்சியகமும் அமைக்கப்படுகிறது. இந்த கட்டிடத்துக்கு கலைஞர் அறிவாலயம் எனவும் பெயரிடப்படுகிறது.

திமுகவின் 4 மாடி அலுவலகம்
கருணாநிதியின் மார்பளவு சிலை, அவரது நினைவை போற்றும் தகவல்கள், கருணாநிதி எழுதிய புத்தகங்கள் ஆகியனவும் இந்த கலைஞர் அறிவாலய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ளது. இக்கட்டிடத்தின் முதல் தளம், திமுகவின் தொழிற்சங்கமாக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 2-வது மாடியில் திமுக கட்சி அலுவலகம் இயங்கும். அப்பகுதியில் எம்.பிக்கள் கூட்டம் நடைபெறுவதற்கான அறை, கட்சி நிர்வாகிகளின் அறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. 3-வது மாடியில் கலந்துரையாடல் கூட்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 4-வது மாடியில் கட்சித் தலைவர்கள் மற்றும் விருந்தினர்கள் தங்கும் அறை கட்டப்பட்டிருக்கிறது.

டெல்லி செல்லும் ஸ்டாலின்
இந்த கலைஞர் அறிவாலயம் தற்போது திறப்பு விழா காண இருக்கிறது. சென்னையில் செப்டம்பர் 15-ந் தேதி திமுகவின் முப்பெரும் விழாவை நடத்திவிட்டு மறுநாள் டெல்லி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். டெல்லியில் செப்டம்பர் 17, 18 ஆகிய இரு நாட்கள் மு.கஸ்டாலின் தங்குகிறார். அப்போது இந்த கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவும் நடைபெற உள்ளது.

எதிர்க்கட்சிகளின் சங்கமம்
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா (மமதா) பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சவாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் என அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் அழைக்க திட்டமிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன. டெல்லியில் அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் சங்கமிக்கும் விழாவாக நடத்தப்பட உள்ளது.

பாஜகவுக்கும் அழைப்பு?
இதனிடையே திமுகவில் உள்ள மூத்த எம்.பி.க்கள் சிலர், அரசியல் மாறுபாடு கொள்ளாமல், அரசியல் நாகரீகத்தை உயர்த்திப் பிடிக்கும் வகையில் பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் அழைக்கலாம் என்று முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாகவும் மு.க.ஸ்டாலின் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications