பழம்பெரும் நடிகை லதா பிறந்தநாளுக்கு எம்ஜிஆர் கொடுத்த பரிசு என்ன தெரியுமா? சுவாரஸ்ய தகவல்
சென்னை: எனது பிறந்தநாளைக்கு எம்ஜிஆர் கொடுத்த பரிசு பொருள் குறித்து பெருமை பொங்க நடிகை லதா தெரிவித்துள்ளார். நான் நடிக்க வந்த போது ஜெயலலிதா ஒதுங்கிவிட்டார் என்றும் நடிகை லதா தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் அறிமுகப்படுத்திய நடிகைகளில் லதாவும் ஒருவர்.
நடிகை லதா 1970, 1980 களில் புகழ்பெற்ற நடிகையாக தென்னிந்திய திரையுலகில் இருந்தார். தமிழ், தெலுங்கு மொழித் தொலைகாட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். தற்போது வள்ளியில் ராஜேஸ்வரி எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 1973 ஆம் ஆண்டு எம்ஜிஆர் தயாரித்து நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் முதல்முறையாக நாயகியாக நடித்தார். இந்த படத்தின் தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், ஜப்பான் ஆகிய நாடுகளில் எடுக்கப்பட்டது.
இந்த படத்தின் வெற்றி காரணமாக தொடர்ந்து எம்ஜிஆர் படங்களில் நாயகியாக நடித்தார். எம்ஜிஆர் சிபாரிசால் அக்கினேனி நாகேஸ்வர ராவின் நாயகியாக அந்தால ராமுடு என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார். பிலிம்பேர் விருதுகள் மற்றும் கலைமாமணி விருது போன்ற உயரிய விருதுகளை வென்றுள்ளார். 1974 ஆம் ஆண்டு மட்டுமே இவர் 4 படங்களில் நடித்துள்ளார்.
திருமணம்
லதா சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சீனிவாசன் மற்றும் கார்த்திக் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். எம்ஜிஆர் காலத்து ஹீரோயினான லதா தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது நிறைய செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.
அம்மா
இதுகுறித்து தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் நான் எம்ஜிஆர் அறிமுகப்படுத்திய ஹீரோயின் என்பதால் பெரியவர்கள் கூட என்னை அம்மா என்றுதான் அழைப்பார்கள். அது போல் நான் சினிமாவுக்கு நடிக்க வந்த காலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விலகிவிட்டார். நானும் ஜெயலலிதாவும் சேர்ந்து நடித்ததில்லை.
நன்றாக பழக்கம்
ஆனால் என்னுடன் ஜெயலலிதா நன்றாக பழகினார். பெர்சிய நாட்டை சேர்ந்த அழகு கலை நிபுணர் ஜெயலலிதாவுடன் எப்போதும் இருப்பார். அவர் ஒரு முறை எனக்கு போன் செய்து ஜெயலலிதா என்னை வரச் சொன்னதாக கூறியிருந்தார். இதனால் நானும் போயஸ் தோட்டத்திற்கு சென்றேன். அப்போது அவர் வீட்டில் இருந்த சமையல் செய்யும் பெண்ணிடம் எனக்கு ஒரு ஆப்பிள் ஜூஸ் எடுத்து வர சொன்னார்.
முதல்வரான ஜெயலலிதா
பிறகு நீங்களும் நானும் அசப்பில் ஒரே மாதிரி இருக்கிறோம் என தெரிவித்தார். அதன் பிறகு அவர் ஆட்சிக்கு வந்து முதல்வரானதும் அவர் வீட்டுக்கு செல்லவில்லை. பிறகு 1990 களில் ராஜஸ்ரீயின் இல்ல திருமண விழாவில் அவரை பார்த்தேன். அப்போது ஏன் என் வீட்டிற்கு வருவதில்லை என கேட்டார். நானும் வருகிறேன் என சொன்னேன்.
அப்பல்லோ சென்றேன்
அதன் பிறகு ஜெயலலிதாவுக்கு உடல் நிலை சரியில்லை என்பதை அறிந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றேன். ஆனால் அங்கு அவரை பார்க்க முடியவில்லை. ஒரு அறையில் சிறிது நேரம் இருந்துவிட்டு பிறகு சென்றுவிட்டேன். எம்ஜிஆரை நான் முதல் முதலில் பார்த்த போது தரையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்.
தரையில் சாப்பிட்ட எம்ஜிஆர்
ஏன் தரையில் அமர்ந்துள்ளீர்கள், சேர் டேபிள் போட்டு சாப்பிடலாமே என கேட்டேன், அதற்கு அவர் தரையில் அமர்ந்தால்தான் குறைவாக சாப்பிட முடியும். எளிதில் வயிறு நிரம்பிவிடும் என்றார். பெரியவர்களாக இருந்தாலும் சிறியவர்களாக இருந்தாலும் மரியாதை கொடுக்க வேண்டும் என கற்றுக் கொடுத்தார். அது போல் அவரது உதவி செய்யும் குணத்தை பார்த்துவிட்டுதான் நானும் அனைவருக்கும் உதவிகளை செய்தேன்.
பிறந்தநாள் பரிசு
எனக்கு பிறந்த நாள் வந்த போது உனக்கு என்ன பரிசு வேண்டும் என கேள் என்றார். நான் எனக்கு ஒன்றும் வேண்டாம் என்றேன். சும்மா கேள் ஒரு பிரச்சினையும் இல்லை என்றார், உடனே நான் எனக்கு மோதிரம் வாங்கி கொடுங்கள் என்றேன். அய்யய்யே என்ன நீ கழுத்து நிறைய தங்க நெக்லஸ் வேண்டும், கை நிறைய தங்க வளையல் வேண்டும் என கேட்காமல் வெறும் மோதிரம் கேட்கிறாய் என கிண்டல் செய்தார். பிறகு ஒரு வைர மோதிரத்தை வாங்கி வந்து கொடுத்தார் என கூறிய லதா அந்த மோதிரத்தை நேயர்களுக்கு காண்பித்தார். மேலும் நடிகைகளை அறிமுகப்படுத்தும் போது வேறு யார் படத்திலும் நடிக்க கூடாது என ஒப்பந்தம் செய்து கொள்வாராம் எம்ஜிஆர், அந்த வகையில் நடிகை லதாவுக்கு 5 ஆண்டுகள் ஒப்பந்தம் போடப்பட்டதாம். எம்ஜிஆரே நடிகைகளுக்கு பயிற்சி கொடுத்து பட வாய்ப்பையும் கொடுத்து திடீரென படம் ஹிட்டானதும், வேறு படங்களுக்கு செல்கிறார்கள், இதனால் அவர்களுடைய கால்ஷீட்டுக்கு காத்திருக்க வேண்டிய நிலை வருகிறது என்பதால் எம்ஜிஆர் ஒப்பந்த முறையை கொண்டு வந்தாராம். இதையும் அந்த பேட்டியில் நடிகை லதாவே தெரிவித்தார்.