இடைத்தேர்தலில் களமிறங்கும் ஓபிஎஸ் அணி? மா.செக்கள் கூட்டத்திற்கு ‘திடீர்’ அழைப்பு.. பரபர பிளான்! ஓஹோ!
சென்னை : வரும் ஜனவரி 23-ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஓபிஎஸ் அணி மா.செக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் என்ற நிலையே நீடித்து வருவதால் இரட்டை இலை சின்னத்திற்கு இருவரும் கையெழுத்திட வேண்டும்.
எனவே இரட்டை இலை சின்னம் எந்த அணிக்கும் கிடைக்காத நிலை ஏற்படுக்கூடும் என கூறப்படுகிறது. இந்தப் பிரச்சனைகளுக்கு மத்தியில் ஓபிஎஸ் அணியினர் மா.செக்கள் கூட்டத்தைக் கூட்டவிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இடைத்தேர்தல் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா சமீபத்தில் காலமான நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சின்னம் யாருக்கு?
இரட்டை இலை சின்னத்தில் கையெழுத்துப் போடும் அதிகாரம் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரிடமும் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே அதிமுக தலைமைப் பதவி யாருக்கு என்ற போட்டியால் கடந்த 6 மாதங்களாக உட்கட்சிப்பூசல் தொடர்ந்து வருகிறது. அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்னும் தீர்ப்பு வராததால் சின்னம் முடக்கப்படும் சூழலே இருக்கிறது. சின்னம் குறித்து இன்னும் தெளிவான முடிவு இல்லாததால், இடைத்தேர்தலில் அதிமுக என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஓபிஎஸ் அணி மா.செக்கள் கூட்டம்
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடக்கும் இந்த மா.செக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

என்ன திட்டம்?
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட அன்றே ஓபிஎஸ் மா.செக்கள் கூட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளரைக் களமிறக்க திட்டம் இருக்கிறதா? அல்லது, இடைத்தேர்தலை ஓபிஎஸ் அணி புறக்கணிக்குமா, அல்லது வேறு ஏதேனும் முடிவை எடுப்பார்களா என்பது ஜனவரி 23ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக்குப் பிறகே வெளிப்படையாகத் தெரியவரும்.

ஓபிஎஸ் உத்தரவிட்டால்
இதற்கிடையே, ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பற்றி முன்னணி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், "ஓபிஎஸ் உத்தரவிட்டால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவோம். இரட்டை இலை சின்னத்தில் இடைத்தேர்தலில் நிற்போம். இரட்டை இலை சின்னம் எங்களிடம் தான் இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications