“பிரதமர் மோடியை வரவேற்க காவி குடை கொடுத்ததா திமுக அரசு?” பாய்ந்த விமர்சனங்கள் - உண்மை என்ன?
சென்னை : நேற்று மாலை தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு பாஜக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்திற்கே சென்று அமைச்சர்களும், பாஜக தலைவர்களும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் வரவேற்றனர்.
பின்னர், ஹெலிகாப்டரில் அடையாறு ஐ.என்.ஸ் விமானப்படை தளத்திற்கு வந்த பிரதமர் மோடியை நேரில் சென்று 'சிலப்பதிகாரம்' புத்தகம் வழங்கி வரவேற்றார் முதல்வர் ஸ்டாலின்.
இதற்கிடையே, தமிழ்நாடு போலீசார் காவிக் குடைகளுடன் பிரதமர் வருகைக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக ஒரு தகவல் பரவியது. ஆனால், அது உண்மையல்ல எனத் தெரியவந்துள்ளது.

முந்தைய ஆட்சியின்போது
தமிழகத்தில் முந்தைய அதிமுக ஆட்சியின்போது பிரதமர் மோடி எப்போதெல்லாம் தமிழ்நாடு வருகிறாரோ அப்போதெல்லாம் கறுப்புக் கொடி காட்டுவது, கறுப்பு பலூனை பறக்கவிடுவது, ட்விட்டரில் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்குவது என திமுகவினர் தீவிரமாக எதிர்த்து வந்தனர். திமுகவினரின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் பிரதமர் செல்வதற்காக சென்னை ஐஐடி சுவரை உடைத்து புதிய பாதையெல்லாம் உருவாக்கப்பட்டது பலருக்கும் நினைவிருக்கும்.

ஆனால் இப்போது
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தபிறகு ப்ரோட்டாகால்படி முதல்வர் பிரதமரை வரவேற்க வேண்டிய நிலை எழுந்துள்ளது. இதனால் ஆளும்கட்சியான திமுக பிரதமர் மோடியின் வருகைக்கு வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவிக்கவும் முடியவில்லை. அதன் காரணமாக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடும், ஆளுங்கட்சியாக ஆனபிறகு வேறொரு நிலைப்பாடும் எடுப்பதாக திமுகவை பலரும் தற்போது விமர்சித்து வருகின்றனர்.

கட்சிக் கொடி
பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு இந்த முறை கடும் எதிர்ப்பு இல்லாத நிலையில், பாஜகவினர் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்தனர். இதனால் வழக்கத்தை விட அதிகமான பாஜக கொடிகளை சென்னை முழுக்க பார்க்க முடிந்தது. காவி பலூன்களை பறக்க விட பாஜகவினர் திட்டமிட்டிருந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி தமிழக காவல்துறை அதற்கு அனுமதி மறுத்துவிட்டது.

காவிக் குடை
இந்நிலையில்தான் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் சுற்றலில் இருந்தது. தமிழக போக்குவரத்து காவல் துறையினர் தங்களது கைகளில் காவி நிற குடையை வைத்துக்கொண்டு நிற்பது போன்ற புகைப்படம் அது. திராவிட மாடல் ஆட்சி என முதல்வர் ஸ்டாலின் கூறி வரும் நிலையில் போலீசார் கையில் காவி நிறக் குடையா என பலரும் கேள்வி எழுப்பினர். பிரதமர் மோடி வருகைக்கான ஏற்பாடு இது என்றும், பா.ஜ.கவுக்கு திமுக அரசு காவி குடை பிடிக்கிறது என்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பலரும் விமர்சித்து வந்தனர்.

கடும் விமர்சனம்
"பிரதமர் மோடி தமிழகம் வருவதை வரவேற்கும் விதமாக போக்குவரத்து காவலர்களுக்கு காவி குடை" என அதிமுகவின் காஞ்சிபுர மாவட்ட ஐ.டி விங் மாவட்ட செயலாளர் சதீஷ் சங்கர் உள்ளிட்ட பலர் அந்தப் புகைப்படத்தை பதிவிட்டனர். சூழலியல் செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷும் இதுதொடர்பாக பதிவிட்டிருந்தார். மேலும், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சியினரும் இந்த விவகாரத்தில் திமுக அரசை விமர்சித்தனர்.

பாஜக சார்பு?
அவர்களின் விமர்சனங்களுக்கு வலுசேர்க்கும் வகையிலேயே சமீபகாலமாக சில நிகழ்வுகள் நடந்தேறியிருக்கின்றன. ஆம்பூரில் மாட்டிறைச்சி பிரியாணிக்கு தடை, தருமபுரம் பட்டினப் பிரவேசம் பல்லக்கு தூக்க முதலில் தடை பிறகு அதை விலக்கிக்கொண்டது, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறக்க துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவை அழைத்தது என வரிசையாக நடந்து வரும் சம்பவங்களால் திமுக பாஜக பக்கம் சாய்ந்து வருவதாகவும் கூறப்பட்டது.

உண்மை அல்ல
ஆனால், இந்த காவிக் குடை விவகாரத்திற்கும் திமுக அரசு - பாஜக உடனான உறவுக்கும் எந்த முகாந்திரமும் இல்லை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தக் காவிக் குடை பிரதமர் மோடி வருகைக்காக ஏற்பாடு செய்யப்பட்டது அல்ல.
சில நாட்களுக்கு முன்பு திருமலா முறுக்குக் கம்பி நிறுவனமும், ரோட்டரி கிளப்பும் இணைந்து சென்னை போக்குவரத்து போலீசாருக்கு வெயிலுக்கு இதமாக குடைகளை ஸ்பான்சர் செய்துள்ளன. அதை காவி நிறத்தில் கொடுத்துவிட்டதால்தான் இத்தனை களேபரமும்.

காவிக்கு காரணம்
திருமலா ஸ்டீல் நிறுவனத்தின் லோகா உட்பட அந்த நிறுவனம் அதிகமாக காவி நிறத்தையே பயன்படுத்தி வருகிறது. எனவே அந்த நிறுவனம் பயன்படுத்தும் நிறத்திலேயே போக்குவரத்து போலீசாருக்கு குடைகளை ஸ்பான்சர் செய்துள்ளனர். இதில் அரசியல் இல்லை என்றாலும் இந்த காவிக் குடை விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என உயரதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications