யாரும் சாப்பிடாமல் போகாதீங்க! வாழ்த்துக்கூற வந்தவர்களுக்கு மட்டன் பிரியாணி! கனிமொழி பர்த்டே ஸ்பெஷல்!
சென்னை: இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடிய கனிமொழி எம்.பி., தனக்கு வாழ்த்துச் சொல்ல வந்தவர்களுக்கு மதிய உணவாக மட்டன் பிரியாணி விருந்து கொடுத்திருக்கிறார்.
இதற்காக சென்னையின் பிரபல ஹோட்டல் ஒன்றில் ஆர்டர் கொடுக்கப்பட்டு கிலோ கணக்கில் பிரியாணி வாங்கப்பட்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக தனது பிறந்தநாளன்று கனிமொழி எம்.பி. பிரியாணி விருந்து வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

கனிமொழி பிறந்தநாள்
திமுக துணைப் பொதுச்செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். காலையில் முதல் வேலையாக கோவையில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற கையோடு 9.15 விமானத்தை பிடித்து சென்னை வந்திறங்கினார் கனிமொழி. விமான நிலையத்திலிருந்து நேராக சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம், அண்ணா நினைவிடத்துக்கு சென்று மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

மட்டன் பிரியாணி
அதன் பிறகு சிஐடி காலனி இல்லம் திரும்பிய கனிமொழி எம்.பி. தனது தாயார் ராஜாத்தி அம்மாளிடம் வாழ்த்துப் பெற்றுவிட்டு, விசிட்டர்களை சந்திக்கத் தொடங்கினார். தாம் எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகம் இருந்ததால் மிகுந்த உற்சாகமடைந்த கனிமொழி எம்.பி., தனக்கு வாழ்த்துச் சொல்ல வந்தவர்களை மதிய உணவு சாப்பிட்டுவிட்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து பிரபல உணவகத்தில் ஆர்டர் கொடுத்து வாங்கப்பட்ட ஸ்பெஷல் மட்டன் பிரியாணி விருந்து ஒரு பக்கம் நடைபெற்றது.

கேக் வெட்டும் நிகழ்ச்சி
மற்றொரு பக்கம் கேக் வெட்டும் நிகழ்ச்சிகள் களை கட்டி காணப்பட்டன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு டிசைனில் கேக்குகளை வாங்கி வந்து கனிமொழியை வெட்டச் சொல்லி மகிழ்ந்தனர். அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஸ், செந்தில் பாலாஜி, வெள்ளக்கோவில் சாமிநாதன், உள்ளிட்ட பலரும் கோவையிலேயே கனிமொழியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறிவிட்ட நிலையில் சென்னையில் உள்ள சிஐடி காலனி இல்லத்தில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், செஞ்சி மஸ்தான்,தங்கம் தென்னரசு, சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசி, மார்கண்டேயன், கோ.தளபதி உட்பட இன்னும் பலர் பிறந்தநாள் வாழ்த்துக் கூறினர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதிர் ஆனந்த், தமிழச்சி தங்கபாண்டியன், கவுதம சிகாமணி, சென்னை மேயர் ப்ரியா ராஜன், மகளிரணி நிர்வாகிகள் என பலரும் கனிமொழிக்கு வாழ்த்துச் சொல்ல திரண்டிருந்தனர். இதனால் சிஐடி காலனி இல்லம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. அதேபோல் கனிமொழி இல்லம் அமைந்துள்ள தெருவும் நீண்ட நாட்களுக்கு பிறகு களைகட்டிக் காணப்பட்டது.

வாழ்த்தரங்கம்
கனிமொழிக்காக திரண்டு வந்து வாழ்த்துச் சொல்லிய கூட்டத்தை கண்டு ராஜாத்தி அம்மாள் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே இன்று மாலை திமுக மகளிரணி ஏற்பாட்டில் பெண்ணினப் பெருமையே என்ற தலைப்பில் வாழ்த்தரங்கம் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.












Click it and Unblock the Notifications