அரசு நிகழ்ச்சியில் எதற்கு ஆளும் கட்சியினர்.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னை: கொரோனா நிவாரணமாக தமிழக அரசின் சார்பில் ரூ.2000 பணம், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாயவிலை கடைகள் மூலம் கடந்த 15 ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிவாரண தொகையை வழங்கும்போது ஆளும் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடன் கட்சி நிர்வாகிகளை ஏராளமானோரை அழைத்துச் சென்று கொரோனா நிதி வழங்குவதாகவும், இது தொடர்பாக கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்துள்ள உத்தரவை ஆளும்கட்சியினர் மீறுவதாக கூறி சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த தேவராஜ் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இன்று இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தலைமையிலான முதன்மை அமர்வில் விசாரணைக்கு வந்தது.
சமூக இடைவெளி இல்லை
தேவராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் லட்சுமி நாராயணன், நிவாரண நிதியாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 2000 அரசால் வழங்கபட்டு வருகிறது. அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அதை வழங்கும் விதத்தில் அபாயகரமான சூழ்நிலை நிலவுகிறது. ரேஷன்கடைகளில் நிவாரண தொகையை வழங்கும் எம்எல்ஏக்கள் ஆளுங்கட்சியினருடன் வந்து விதிமுறைகளை பின்பற்றாமல் சமூக இடைவெளி இல்லாமல் முகக் கவசம் அணியாமல் நிற்கின்றனர். இதனால் மேலும் கொரோனா பரவும் அபாயம் இருக்கிறது என்றார்.
ஆதரவாளர்கள் குவிவதாக வாதம்
மேலும், சென்னை ஆயிரம் விளக்கு, அண்ணா நகர், ராதாபுரம், வளசரவாக்கம் ஆகிய தொகுதிகளில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் நிவாரணம் வழங்கும்போது ஆளுங்கட்சியினரை அழைத்துக் கொண்டு வந்து நிவாரணம் வழங்குவது தொடர்பான புகைப்படங்களை நீதிபதிகளிடம் சுட்டிக்காட்டினார். மேலும்" ராதாபுரம் தொகுதியில் சபாநாயகர் ஏராளமான தொண்டர்கள் அழைத்துக்கொண்டு இவ்வாறு நிவாரணம் வழங்கியுள்ளார். அங்கு திமுகவினர் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அதில் ஓரிருவர் முக கவசம் கூட அணியாமல் உள்ளனர். சபாநாயகர் என்பவர் கட்சி சார்பற்றவர். சபாநாயகரை வரவேற்று ஆளும்கட்சியின் சின்னம் கொடி அச்சிட்ட பேனர்கள் நிறுவப்பட்டுள்ளன.
இப்போதைய ஆளும் கட்சி முன்பு வழக்கு போட்டது
இதே நீதிமன்றத்தில் கடந்த முறை முந்தைய அரசாங்கம் நிவாரணம் வழங்குகிற போது இதே ஆளுங்கட்சியினர் வழக்கு தொடர்ந்தனர். கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். அரசியல்வாதிகள் பங்கேற்ககூடாது. கட்சி சின்னம் கொடி எந்தவிதத்திலும் ரேஷன்கடைகளில் தெரியும் வண்ணம் நடைபெறக்கூடாது என வாதிட்டு உத்தரவை பெற்றனர். தற்போது அந்த உத்தரவை ஆளுங்கட்சியினரே காற்றில் பறக்கவிட்டுவிட்டனர்" என வாதிட்டார் .
அரசுக்கு நோட்டீஸ்
உடனே தலைமை நீதிபதி, அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரத்தை நோக்கி கடந்த முறை நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆளுங்கட்சியினர் இவ்வாறு செய்வதை தடுக்க வேண்டும் என்று கூறித்தானே உத்தரவை பெற்றீர்கள்? தற்போது நீங்கள் ஆளுங்கட்சியாக வந்ததும் அந்த உத்தரவை மீறலாமா? என கேள்விகள் எழுப்பினார். இதைத்தொடர்ந்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் இது குறித்து அரசிடம் தகவல் பெற்று திங்கட்கிழமை தெரிவிப்பதாக கூறினார். இதைத் தொடர்ந்து வரும் திங்கட்கிழமைக்கு இவ்வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்து தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.