டெல்டா பிளஸ்.. பீதியே வேண்டாம்.. வழக்கமான சிகிச்சையிலேயே குணமடைகிறார்கள்- அமைச்சர் மா.சு பேட்டி
சென்னை: டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அமைச்சர் சுப்பிரமணியன்.
அப்போது அவர் கூறியதாவது:

ஏற்கனவே தாக்கியிருக்கும் போல
இரண்டாவது அலை காலகட்டத்தின்போது டெல்டா பிளஸ் வைரஸ் பலரையும் தாக்கி சென்றிருக்க கூடும் என்று சந்தேகிக்கிறோம். இப்போது டெல்டா பிளஸ் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ள இரண்டு பேருக்கும் வழக்கமான சிகிச்சை முறைகள் தான் கொடுக்கப்பட்டு அதில் அவர்கள் குணமடைந்துள்ளனர்.

பெரிய பாதிப்பு இல்லை
இந்த வகை வைரஸ், வேறு மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என்பதை உறுதி செய்துள்ளோம். டெல்டா ப்ளஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை பரி சோதனைக்கு உட்படுத்தினோம். அப்போது இது மிகப்பெரிய நோய் பரவலை ஏற்படுத்தவில்லை என்பதை அறிந்தோம்.

வழக்கமான சிகிச்சை
எனவே டெல்டா உருமாறிய கொரோனா பற்றி அதிகம் அச்சப்படத் தேவை கிடையாது. வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் வழக்கமான சிகிச்சை நடைமுறைகளையும் எடுத்தால் போதுமானது.

வைரஸ் பகுப்பாய்வு மையம்
வைரஸ் சாம்பிள்களை பெங்களூருக்கு அனுப்பி ரிசல்ட் வர கால தாமதம் ஆகும். எனவே சென்னையில் வைரஸ் பகுப்பாய்வு மையம் அமைக்க முடிவு செய்துள்ளோம். தமிழக முதல்வர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

டாக்டர் காமேஸ்வரன் குழு
கருப்பு பூஞ்சை பற்றி ஆய்வு செய்ய டாக்டர் மோகன் காமேஸ்வரன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. அந்த குழு பலமுறை உட்கார்ந்து பேசி கரும்பூஞ்சை மருத்துவம் எப்படி செய்வது, அரசு மருத்துவமனைகளில் தனியார் மருத்துவமனைகளில் எப்படி சிகிச்சை தருவது என ஆலோசித்துள்ளது.

கருப்பு பூஞ்சை நடவடிக்கை
ஆரம்ப நிலையிலேயே மருத்துவமனைக்கு வந்தால் முழுமையாக குணப்படுத்தலாம் என்று அறிவிப்பு சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை எல்லா அரசு மருத்துவமனைகளிலும் கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சை மையங்கள் திறந்து வைத்திருக்கிறோம். சென்னையை பொறுத்தவரை 500 படுக்கைகள் மதுரையை பொறுத்தவரை 500 படுக்கைகள் மற்ற மாவட்டங்களில் 100, 200 என்ற வகையில் படுக்கைகள் ஒதுக்கி தயாராக இருக்கிறது. கருப்பு பூஞ்சை சம்பந்தமான இடைக்கால அறிக்கை ஒன்றினை சேர்ந்த டாக்டர் மோகன் காமேஸ்வரன் தலைமையிலான குழுவினர் இன்று முதல்வரிடம் தந்திருக்கிறார்கள். இவ்வாறு மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications