குழந்தைகளுக்கு காய்ச்சல், சளியா?.. மெடிக்கல் ஷாப்பில் சுய மருந்து வாங்குவோரா.. உஷார்! இதை படிங்க!
சென்னை: குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் ஏற்பட்டால் சுய மருத்துவமோ மெடிக்கல் ஷாப் கடைக்காரரையோ அணுக கூடாது என்றும் அதனால் என்னென்ன ஏற்படும் என்பது குறித்தும் சிவகங்கை அரசு பொது மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா விழிப்புணர்வு பதிவை போட்டுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
சமீபத்தில் தனது ஒரு வயது குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் சளி என ஒரு பெண்மணி அழைத்து வந்திருந்தார். காய்ச்சல் சனிக்கிழமையிலிருந்து அடிப்பதாகக் கூறினார்.
சனிக்கிழமை இரவு வேலை முடித்து வீடு திரும்பிய இவரது கணவர் மெடிக்கல் ஸ்டோரில் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் சளி என்று கூற அவர்களும் இரண்டு டானிக்குகள் கொடுத்துள்ளனர்.
அட வைரமே.. ஜஸ்ட் ஒரு சின்ன கல்லுதான்... ரூ.480 கோடிக்கு விற்பனை.. வியந்து பார்க்கும் உலகம்
காய்ச்சல்
இருமலுக்கு ஒன்று காய்ச்சலுக்கு ஒன்று என காய்ச்சல் டானிக் மற்றும் இருமல் டானிக் இரண்டையும் 2.5 மில்லி கொடுக்கச் சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். இதில் காய்ச்சல் டானிக்கை 2.5 மில்லி கொடுக்கச் சொன்னது ஓரளவு சரியே, காரணம் அந்த பையனின் எடை 8 கிலோ, பாராசிடமால் கொடுக்க வேண்டிய அளவு குழந்தையின் எடையை (கிலோ) பதினைந்தால் பெருக்கினால் கிடைக்கும்.
ஆறு மணி நேரம்
இவ்வாறு ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம் . இந்த குழந்தைக்கு 8 ( குழந்தையின் எடை) * 15 = 120 மில்லி கிராம் கொடுக்க வேண்டும். ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை 120 மில்லி கிராம் பாராசிடமால் கொடுக்கலாம். அந்த மெடிக்கல் ஷாப் வைத்திருப்பவர் கொடுத்த காய்ச்சல் டானிக்கில் 5 மில்லியில் 250 கிராம் பாராசிடமால் அடங்கியிருக்கிறது.
விபரீதம்
ஆகவே 2.5 மில்லி = 125 மில்லி கிராம் கொடுக்கச் சொன்னது சரி. ஆனால் விபரீதம் எங்கு வருகிறது பாருங்கள். கூட சளி இருமலுக்கு என ஒரு டானிக்கை கொடுத்துள்ளார்கள். அதில் சளி இருமலை நிறுத்த வேண்டிய மருந்துகளின் ஊடே பாராசிடமாலும் கலந்திருக்கிறது. அதிலும் 2.5 மில்லி கொடுக்கச் சொல்லியிருக்கிறார்.
இடைவெளிவிட்டு
அந்த டானிக்கில் 5 மில்லியில் 125 மில்லி கிராம் பாராசிடமால் இருக்கிறது. ஆக, 2.5 மில்லியில் 62.5 கிராம் பாராசிடமால் இருக்கும். மேலும் எப்போதெல்லாம், எந்த கால இடைவெளியில் இந்த இரண்டு டானிக்கையும் கொடுக்க வேண்டும் என்று கூறி அனுப்பவில்லை.
இதனால் ஒவ்வொரு முறை இந்த இரண்டு டானிக்கையும் கொடுக்கும் போதும் தேவைக்கு மீறி 62.5 கிராம் பாராசிடமால் ஓவர் டோசாக குழந்தைக்கு இரண்டு நாட்களாக கிடைத்துள்ளது.
வயிற்று வலி
என்னிடம் குழந்தையை அழைத்து வரும் போது வாந்தி , வயிற்று வலி இருந்தது. அதற்கு காரணம் தகுந்த மருத்துவரை நாடாமல் மெடிக்கல் ஸ்டோரை நம்பி சிகிச்சை அளித்ததே என்று ஆணித்தரமாக கூறலாம். குழந்தைகளுக்கு பாராசிடமால் ஓவர் டோஸ் ஆனால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு மரணம் வரை கூட எளிதில் சம்பவிக்கும். மருத்துவத்திற்கு தகுதியான மருத்துவர்களை தேர்ந்தெடுப்போம். மருந்தகங்களில் மருத்துவர்களின் பரிந்துரையோடு மட்டும் மருந்துகள் பெறுவோம். சுய மருத்துவம் கேடு விளைவிக்கும். குழந்தைகள் உயிரோடு விளையாட வேண்டாம். இவ்வாறு தனது பேஸ்புக் பதிவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அளவுக்கு டாக்டர் பரூக் அப்துல்லா பதிவு செய்துள்ளார்.